இலங்கையை அனைத்துலக நீதிமன்றத்தில் நிறுத்துக: பத்துலட்சம் கையெழுத்து இயக்கம் தமிழகத்திலும் தொடங்கியது

இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாராப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் பத்துலட்சம் கையெழுத்தினை திரட்டும் இயக்கம் தமிழகத்திலும் தொடங்கப்பட்டது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இணையவழி பரிவர்த்தனையூடாக பங்கெடுத்திருந்த ஊடக மாநாட்டுடன் இணைந்ததாக இக்கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழகத்தின் சமூக-அரசியற் பிரமுகர்கள் பலர் பங்கெடுத்திருந்திருந்தனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத் தோழமை மையம் ஏற்பாட்டில் பேராசியர் சரசுவதி அம்மையார் தலைமையேற்க சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 06.05.2015 அன்று காலை 11.30 மணியளவில் இக்கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் திரு.விசுவநாதன் உருத்திரக்குமாரன் அவர்கள் இணையம் வழியாக நேரடியாக காணொளிக்காட்சி வழியாக உரையாற்றி ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

பின்னர் தமிழக வாழ்வுரிமைக்கட்சியின் தலைவர் தோழர் வேல் முருகன், திராவிடர் விடுதலைக்கழகத்தின் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, தோழர் ஹைதர் அலி (தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்), அருட்தந்தை குழந்தைச்சாமி உரையாற்றினர்.

முதல் கெயெழுத்தினை தோழர் வேல் முருகன் பதாகையில் இட்டு தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் தங்களின் ஆதரவினை தெரிவித்துக் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்வில் திராவிடர் விடுதலைக்கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.இராசேந்திரன், ஊடகவியலாளர் தெ.சீ.சு.மணி, தோழர் கே.பிரபாகரன் ( மாணவர் கூட்டமைப்பு), தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனர் கபடி மாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமை அமைச்சர் திரு.விசுவநாதன் உருத்திரக்குமாரன் அவர்கள் காணொளி காட்சி மூலம் சென்னையிலுள்ள செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

இலங்கை குறித்த ஐ.நா. உள்ளக மதிப்பீட்டு அறிக்கையின்படி, 2009-ஆம் ஆண்டு போரின்போது முதல் ஆறு மாதங்களில் 70,000 தமிழர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இந்த போர்க்குற்றங்கள் தொடர்பாக, ஒரு உள்நாட்டு அமைப்போ அல்லது வேறொரு வெளிநாட்டு ஒத்துழைப்புடன் கூடிய உள்நாட்டு அமைப்போ தமிழ் மக்களுக்கு நீதியை அளிக்காது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

புதிதாக பொறுப்பேற்றுள்ள இலங்கை அரசு ஒரு உள்நாட்டு அல்லது கலப்பு அமைப்பைக் கோருவது, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன் இலங்கை அரசை நிறுத்தும் கோரிக்கையை திசை திருப்புகிற, தாமதப்படுத்துகிற முயற்சியாகும்.

மேலும், இலங்கை அரசும், நீதித்துறைம் இன ரீதியாக நடுநிலையாக இல்லை. தமிழர்களுக்கு நீதி வழங்கும் அரசியல் உறுதிப்பாடு இலங்கையில் இல்லை. எனவே, அதிபர் மாற்றப்பட்டுவிட்டாலும் கூட, தமிழர்கள் தொடர்பான அரசியல் சூழல் மாறவில்லை.

போரின் முடிவில் ராணுவ படைத்தலைவராக இருந்த தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்ட பல முன்னாள் இராணுவ அதிகாரிகள் தற்போதைய அரசாங்கத்தில் முதுநிலை பதவிகளில் இருக்கிறார்கள்.

ராணுவம் இன்னமும் அவ்வாறே உள்ளது. வட கிழக்குப் பகுதிகளில் இராணுவ மயமாக்கல் தமிழர்களிடையே அச்சத்தை நீடிக்கச் செய்கிறது. மேலும் இந்த நடவடிக்கை அங்கு அன்றாட நடவடிக்கைகளில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, பாதிக்கப்பட்டவர்களின் சாட்சிகள் உள்நாட்டு அல்லது கலப்புத் தீர்ப்பாயத்தின் முன்பு உண்மையில் சுதந்திரமாக இருப்பதற்கு சாத்தியமில்லை.

எனவே, இந்த இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு இலங்கையை நிறுத்த வேண்டும். இல்லையென்றால், அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணை அமைப்பு ஒன்றினை ஐ.நா சபை நிறுவ வேண்டும் என்றார்.

கையெழுத்து இயக்கத்தை ஆதரியுங்கள்!

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வலியுறுத்தி, 10 லட்சம் கையெழுத்துகளை திரட்டி ஐக்கிய நாடுகள் சபையிடம் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக, தமிழகம், உலக நாடுகளில் உள்ள தமிழர்கள் அனைவரும் www.tgte-icc.org என்ற இணையதளத்தில் கையெழுத்திட்டு ஆதரிக்க வேண்டும்.

இந்த கையெழுத்து இயக்கத்தின் மூலம் பெறப்படும் கையெழுத்துகள், செப்டம்பர் 15-ஆம் தேதிக்குள் ஐ.நா சபையிடம் அளிக்கப்படும் என்றார்.


12

13

More from our blog

See all posts