உலகத்தமிழர் தேசிய காங்கிரஸ் அமைக்க தமிழக அரசிடம் பிரதமர் வி.உருத்திரகுமாரன் கோரிக்கை!

  • December 8, 2014
  • TGTE
uruthirakumaranதமிழகம், ஈழம், தமிழ் டயாஸ்பொறா, மலேசியா, சிங்கப்பூர், மொரிஸியஸ், தென்னாபிரிக்கா போன்ற தமிழ் மக்கள் அதிகம் வாழும் நாடுகளைச் சேர்ந்து தமிழர் தலைவர்கள் அனைவரும் இணைந்து, உலகத்தமிழ் தேசிய காங்கிரஸ் போன்ற அமைப்பினை உருவாக்க வேண்டும் என நா.க.த.அரசு பிரதமர் தெரிவித்துள்ளார்.

தமிழகம், ஈழம், தமிழ் டயாஸ்பொறா, மலேசியா, சிங்கப்பூர், மொரிஸியஸ், தென்னாபிரிக்கா போன்ற தமிழ் மக்கள் அதிகம் வாழும் நாடுகளைச் சேர்ந்து தமிழர் தலைவர்கள் அனைவரும் இணைந்து,

உலகத்தமிழ் தேசிய காங்கிரஸ் போன்ற அமைப்பினை உருவாக்குதன் மூலம் தமிழர்களை உலக அரங்கில் பலம் மிக்க மக்களாக நிலைநிறுத்த முடியும் என பிரதமர் வி.உருத்;திரகுமாரன் அவர்கள் தெரிவித்துள்ளதோடு தமிழக அரசினை நோக்கி இந்த அறைகூவலை விடுத்துள்ளார்.

நியூயோர்க்கிலும் பாரிசிலும் இணைந்ததாக இடம்பெற்று வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் 2வது நேரடி பாராளுமன்ற முதன்நாள் தொடக்கவுரையிலேயே இந்த அறைகூவலை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ளார்.

இத்தகையதொரு முன்னெடுப்பில் தமிழர் தலைவர்கள் எல்லாம் தமது கட்சி பேதங்கள் பார்க்காது இணைந்து கொள்ளல் வேண்டும் எனத் தெரிவித்துள்ளதோடு இத்தகையதொரு உலகளாவிய தமிழர் அமைப்பு, ஈழத் தமிழர் விடுதலையைத் தாங்கிநிற்கும் போது, அனைத்துலக அரசுகள் எம்மை உதாசீனம் செய்து விட முடியாது என அவர் இடித்துரைத்துள்ளார்.

முதன்நாள் அமர்வில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் ஆற்றிய உரையின் முழுவடிவம்:

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வில் கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் மாவீர்களை மனதில் இருத்தி எனது வணக்கத்தை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாவது அரசவைக்காலத்தக்குரிய இரண்டாவது நேரடிஅமர்வில் கூடியிருக்கிறோம்.

இந்த அமர்வு அரசவை உறுப்பிர்களையும், மேலவை உறுப்பினர்களையும் இணைத்ததோர் அமர்வாக அமைகிறது. இவ் அமர்வில் பங்கு பற்றும் அனைவரதும் கரங்களையும் தோழமையுடன் பற்றிக் கொள்கிறேன்.

நாம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை உருவாக்கி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.

இந்த நான்கு ஆண்டு காலத்தில் தமழீழ மக்களின் தணியாத தாகமாகிய சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசு என்ற அரசியல் தீர்வை, எமது மக்களின் விடுதலை வேட்கையை குறியீடு செய்து நிற்கும் ஓர் அமைப்பாக நாம் உருவெடுத்துள்ளோம்.

அந்த இலக்கை வென்றடைவதற்காக ஜனநாயக வழியில், அரசியல் இராஜதந்திர முறையில் போராடுவதற்காக செயற்படும் அமைப்பாக நாம் வடிவெடுத்துள்ளோம்.

இன்றைய தருணத்தில் எத்தகைதொரு காலகட்டத்தில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உருவாக்கப்பட்டடு என்பதனை ஒரு தடவை திரும்பிப் பார்த்தல் பொருத்தமுடையது எனக் கருதகிறேன்.

2009 ஆம் ஆண்டின் மே மாதம்!

ஈழத் தமிழர் வரலாற்றில் மட்டுமன்றி உலகத் தமிழர் வரலாற்றிலும் நிலையாய் நிலைத்து விட்ட மாதம்.

அனைத்துலக அரசுகளின் உதவியுடன் சிங்களம் எமது மக்களை இனஅழிப்புக்குள்ளாக்கி, தமிழீழத் தாயக மண்ணின் மீதான ஆக்கிரமிப்பினை மேற்கொண்டு முடித்த காலம்.

சிங்களத்தின் ஒவ்வொரு காலடி நகர்வையும் எதிர்த்து, தமிழீழத்தின் வீரர்கள் தேசியத் தலைவரின் தலைமையில் போரிட்டனர். ஆயிரக்கணக்காணோர் மாவீரராகித் தாய்மண் மடியில் விதைந்தனர்.

சிங்களம், நாகரீக உலகம் வெட்கித் தலைகுனியும் வண்ணம் தனது பேரை நடாத்தியது. தடைசெய்யப்டட்ட இரசாயன ஆயதங்களையும் போரில் பயன்படுத்தியது.

அணுகுண்டினைத் தவிர அனைத்து பேராயுதங்களும் எமது போராளிகளுக்கும் மக்களுக்கும் எதிராகப் பயன்படுத்தப்பட்டன.

இருந்த போதும் எதிரியிடம்; மண்டியிடாது மானத்துடன் போரிட்டது நமது சின்னம் சிறிய தேசம். மாபெரும் தமிழன அழிப்பினை நடாத்தியவாறு தமிழீழ தேசத்தை ஆக்கிரமித்து தமிழர்களின் விடுதலை வேட்கையினை நசுக்கி விட்டதாக கொக்கரித்தான்.

இத்தயைதொரு வரலாற்றுச் சூழலில்தான நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிறப்பெடுத்தது. தமிழீழ மக்களின் விடுதலை வேட்கையின் குறியீடாகத் தன்னை வரித்தக் கொண்டது.

முள்ளிவாய்கால் தமிழின அழிப்பின் முதலாம் ஆண்டின் நிறைவை சிங்களம் வெற்றி மமதையுடன் கொண்டாடிக் கொண்டிரந்த அதேவேளை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முதலாவது அங்குரார்ப்பணக் கூட்டத்தினை அமெரிக்க நாட்டில் நடாத்தியது.

இதன் மூலம் சிங்களத்தக்கும் அனைத்துலக சமூகத்தக்கும் தமிழீழ மக்களின் விடுதலை உணர்வு உயிர்ப்பாக உள்ளது என்ற செய்தி முரசறைந்து சொல்லப்பட்டது.

அன்பானவர்களே!

இன்று நாம் ஒரு முக்கியமானதொரு காலகட்டத்தில் கூடியிருக்கிறோம். முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு நடைபெற்று ஜந்தரையாண்டுகள் கழிந்து விட்டன.

இந்த காலகட்டத்தில் தமிழீழ தேசம் எங்கு வந்து சேர்ந்திருக்கிறது என்பதனையும், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எத்தகைய மூலோபாயத்தடன் செயற்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதனையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டிய நேரமிது. போரின் ஊடாக சிங்களம் மேற்கொண்ட தமிழின அழிப்பின் கோரத்தினை நாம் குறைத்து மதிப்பிட முடியாது.

தமிழர்களை ஒரு தேசம் என்ற நிலையியில் இருந்து அழித்தொழித்து வெறும் உதிரிகளாகச் சிதைத்து விடும் நோக்குடன் மிகவும் திட்டமிட்ட வகையில் நடாத்தப்பட்ட இனஅழிப்பு அது. தமிழர் தேசத்தின் வளங்கள் யாவும் சிங்களத்தால் சிதைக்கப்பட்டன. தமிழர் தேசத்தின் நிறுவனங்கள் எல்லாம் நொறுக்கப்பட்டன.

மக்களுக்காக தம்மை அர்ப்பணிக்கக்கூடிய தமிழர் தலைவர்கள் கொல்லப்பட்டனர். மக்கள் ஏதிலிகளாக்கப்பட்டு மிகுந்த அல்லலுக்கு உள்ளாக்கபட்டனர்,போர்க்கைதிகளாகிய ஏராளமான போராளிகள் சித்திரவதைக்கு உள்ளாக்கபட்டு கொடுமைப்படுத்தபட்டனர்.

தமிழ் மக்களின் பொருளாதார வாழ்வு சூறையாடப்பட்டது. தமிழீழ மண் சிங்கள இராணுவ புலனாய்வு வலைப் பின்னலால் சிறைப்பிடிக்கப்பட்டது. உரிமைக்காக குரல் கொடுப்பவர்கள் யாவருக்கம் மரணபயத்தின ஏற்படுத்தும் வகையில் அச்சுறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டன. மக்கள் அச்சம் நிறைந்த சூழிலில் வைக்கப்பட்டனர். மக்களுக்கான அரசியல் வெளி மறுக்கப்பட்டது.

இத்தகையதொரு சூழலில் தமிழ் மக்கள் தம்மிடம் மண்டியிடுவார்கள் என்றுதான் சிங்களம் கருதியது. தமது அடையாளங்களையும் தேச நிலைப்பாட்டையும் கைவிட்டு நாம் எல்லோரும் சிறிலங்கர்கள் என்ற ஒரு மக்கள் என்ற சிங்களத்தின் நிலையைத் தமிழர்கள் தழுவிக் கொள்வார்கள் என்றுதான் எண்ணியது. தமிழர்கள் தம்மீது நம்பிக்கை இழந்து சிங்களத்தின் மேலாண்மையை இயல்பாக ஏற்றுக்கொள்வார்கள் என்றும் நம்பியது.

சிங்களத்தின் இந்த எதிர்பார்ப்பைத் தமிழ் மக்கள் முழுமையாக தகர்த்தெறிந்ர் இருக்கிறார்கள் என்பதை இந்த ஜந்தரை ஆண்டுகள் உறுதியாக பதிவு செய்திருக்கின்றன. இது நமது மக்கள் ஈட்டியுள்ள ஒரு முக்கியமான வெற்றி.

நாம் ஆயதப்போராட்டம் மௌனிக்கபட்டாலும், தமிழர் தேசமாக சிங்களத்தின் காலில் மண்டியிடவில்லை. சிங்கள மேலாண்மையினை ஏற்றுக் கொள்ளவும் இல்லை. இந்த வெற்றியில் இருந்து நமது இறுதி இலக்கான தமிழீழ அரசினை அடைவது வரையான பேராட்டத்தை நாம் நம்பிக்கையுடன் தொடர முடியும்.

ஆயுதப்போரிலும் கூட சிங்களம் உலகைத் துணைக்கு அழைக்காது தனித்துப் போரிட்டிருந்தால் நம்மை வெற்றி கொண்டிருக்க முடியாது. முள்ளிவாய்க்கால் எமக்கு சில படிப்பினைகளையும் தந்துள்ளது.

போரில் எமக்கு எற்பட்ட பேரிடர், தமிழர்களின் வீரத்தின் வீழச்சியல்ல. உள்நாட்டு நிலைமைகளால் மட்டும் விளைந்ததொன்றும் அல்ல.

மாறாக அனைத்துலக அரசுகளின் பாத்திரமே போரின் முடிவைத் தீர்மானிப்பதில் தீர்க்கமாக பாத்திரத்தை வழங்கின. இதில் இந்தியாவினதும் அமெரிக்காவினதும் பாத்திரம் இரகசியமானதொன்றும் அல்ல.

சிங்களம் சம்பாதித்த அனைத்துலக அரச நண்பர்களை, சிங்களம் பயன் படுத்திய அனைத்துலக அரச உறவுகளை, தமிழீழம் சம்பாதிக்கவோ அல்லது பயன்படுத்தவோ முடியாது போனது தான் நமது ஆயதப் போரின் மௌனிப்புக்கு காரணம்.

இது தமிழீழத்தின் தவறு மட்டுமல்ல. அனைத்துலக உறவுகள் கட்டப்பட்ருந்த உலக ஒழுங்கில் தமிழீழத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்புக்களே இருந்தன.

உலக ஒழுங்கு அரசுகளுக்கு சார்பாக இருந்தது. சிங்களத்துக்கு சிறிலங்கா என்ற அங்கீகரிக்கப்பட்ட அரசு இருந்தது. தமிழீழத்தின் நடைமுறை அரசுக்கு அனைத்துலக அங்கீகாரம் இருக்கவில்லை. தமிழர்களுக்கென்று உலகில் வேறு எந்த அரசும் இருக்கவில்லை.

இது முதலாவது காரணம்.

அனைத்துலக உலக ஒழுங்கு தர்மத்தின் சக்கரத்தில் சுற்றமால் நலன்கள் எனும் அச்சில் சுழல்வது அடுத்த காரணம்.  இருந்த போதும், உலகின் வலிமை மிக்க அரசுகளின் நட்புறவு எமது வெற்றிக்கு அவசியமானது என்பதனை முள்ளிவாயக்கால் எடுத்துச் சொன்னது. ஆனால் இஙகு முக்கியமான கேள்ளவி எழுகிறது? நாம் எவ்வாறு இந்த நட்புறவை ஏற்படுத்த வேண்டும்?

உலகின் பலமிக்க அரசுகளின் நலன்களுக்கு மட்டும் சேவகம் செய்தவர்களாக இருந்தால்தான் நட்புறவைப் பேண முடியுயானால் அதனால் தமிழ் மக்களுக்கு என்ன பயன்? தமிழ் மக்களின் நலன்களையும் பலமிக்க அரசுகளின் நலன்களை இணைய வைப்பதற்கான மார்க்கத்தைக் கண்டிறிந்த அதன்வழி பயணிப்பதே தொலைநோக்கில் பயன்தரக்கூடியது என நாம் கருதினோம்.

இந் நிலைப்பாற்பட்டுத்தான் நாம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனைத்தலக உறவுகளுக்கான மூலோபயத்தை வடிவமைத்தோம். அனைத்தலக அரசுகள் தற்போதய காலகட்டத்தில் இலங்கைத்தீவில் இரண்டு நாடுகள் உருவாகுவதனை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதனை நாம் நன்கு அறிவோம். இலங்கைத்தீவில் ஒன்றை அதிகார மையத்தை வைத்துக் கொண்டு தமது நலன்களை அடையவே உலக அரசுகள் தற்போதும் முயல்கின்றன.

இதனால் தனித் தமிழீழ அரசு இல்லாத வகையிலான, நாடு பிரியாத முறையிலான ஒரு தீர்வுமுறை குறித்தே அனைத்துலக அரசுகள் சிந்திக்கின்றன.

ஆனால், சிங்கள பௌத்த இனவாதச் சித்தாந்தத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள சிறிலங்கா அரசு எந்தவகையான அரசியல் தீர்வுக்கும் தயாராக இருக்கப் போதில்லை. இதனால் அனைத்துலக அரசுகளின் ஒற்றையரசு சிந்தனை தோல்வியினைத் தழுவும் என்பது திண்ணம்.

இருந்த போதும் தமிழர்கள் தம்மையொரு வலுமையமாக உருவாக்காவிடின் எம்மை எவரும் ஒரு பொருட்டாகக் கருதப் போவதில்லை. அனைத்தலக அரங்கில் உருவாகக்கூடிய மாற்றங்களைக் கெட்டியாகப் பிடித்து முன்னேறுவதற்கு தமிழர்கள் ஒரு வலுமையமாக உருவாக வேண்டும்.

இவ் அணுகுமுறையின் பாற்பட்டு, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஒரு வலுவான அமைப்பாக நாம் வளர்த்தெடுப்பது மகிவும் அத்தியவாசியமானதான உள்ளது.

தற்பொதய அரசவைக் காலத்தின் அடுத்த நான்காண்டுகளிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்த்தினை செயல்வீச்சுக் கொண்ட அமைப்பாக வளத்தெடுப்பதென நான் உறுதி பூண்டுள்ளேன்.

இதற்கான செயற்திட்டத்தினை பிரதமர் பணியமனையின் ஊடாக பல செயலமர்வுகளை நடாத்தி நாம் வடிவமைத்துள்ளோம்.

ஒரே நேரத்தில் வெவ்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் வகையில் ஒரு Massive Action Plan ஆகத் இத் திட்டங்கள் வடிவமைக்கப்படுகிறன்றன. இத் திட்டங்களை நடைமுறைப்படுத்த பெரும் ஆளணி மற்றும் பொருளாதார பலம் தேவைப்படும். அவற்றையும் திரட்டி எடுப்பதற்கான வழிமுறைகளும் சிந்திக்கப்பட்டுள்ளன.

இத் திட்டங்கள் குறித்த விபரங்கள் நாளை அரசவை அமர்வில் வெளியிடப்படும். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளை வலுப்படுத்த பிரதமர் பணிமனையின் பரிநிதிகளை நாடுலாரியாக நியமிப்பது குறித்து முன்னர் அறிவித்திருந்தேன்.

சில நாடுகளுக்கு பிரதமர் பணிமனையின் பரிநிதிகள் நியமிக்கப்படு;ள்ளனர். இது குறித்தும் நாளை அமர்வில் அறியத்தரவுள்ளேன்.

தமிழர்களை ஒரு வலுமையமாக உருவாக்குவதில் மாவீர்களின் நினைவுகள் காத்தரமாதொரு பங்கை வகிக்கக் கூடியவை. நமக்கு உறுதியையும் வீச்சையும் வழங்கக் கூடியவை. எமது செயற்பாட்டில் உந்து சக்தியாக விளங்கக் கூடியவை.

இதனால் மாவீர்களுக்காக கட்டி எழுப்பதற்குத் திட்டமிடப்படவுள்ள மாவீரர் நினைவாலயமும் எமது போராட்டத்தின் முன்னோக்கிய நகர்வில் முக்கியம் பெறுவதாக அமையும்.

மேலும் தமிழர்கள் வலுமையாக உருவெடுப்பதற்கு தமிழகத்தின் பாத்திரம் முக்கியமானது என்பதனை நான் இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

தமிழகம், ஈழம், தமிழ் டயாஸ்பொறா, மலேசியா, சிங்கப்பூர், மொரிஸியஸ், தென்னாபிரிக்கா போன்ற தமிழ் மக்கள் அதிகம் வாழும் நாடுகளைச் சேர்ந்து தமிழர் தலைவர்கள் அனைவரும் இணைந்து ஒரு உலகத்தமிழ் தேசிய கொங்கிரஸ் போன்ற அமைப்பினை உருவாக்குதன் மூலம் தமிழர்களை உலக அரங்கில் பலம் மிக்க மக்களாக நிலைநிறுத்த முடியும்.

இத்தகையதொரு முன்னெடுப்பை தமிழக அரசு மேற்கொள்வது சிறப்பாக அமையும் என நாம் கருதுகிறோம். இத்தகையதொரு முன்னெடுப்பில் தமிழர் தலைவர்கள் எல்லாம் தமது கட்சி பேதங்கள் பார்காது இணைந்து கொள்ளல் வேண்டும்.

இத்தகையதொரு உலகளாவிய தமிழர் அமைப்பு ஈழத் தமிழர் விடுதலையைத் தாங்கி நிற்கும் போது அனைத்தலக அரசுகள் எம்மை உதாசீனம் செய்து விட முடியாது.

நண்பர்களே!

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. போட்டியிடும் இரண்டு பிரதான வேட்பாளர்களும் சிங்கள பௌத்த பேரினவாத்தை திருப்பதிப்படுத்துவதில் குறியாக உள்ளனர்.

தமிழ், முஸ்லீம் மக்களை எவரும் பொருட்டாவே கருதவில்லை. இது இலங்கைத்தீவின் யதார்த்தத்தை நன்கு வெளிப்படுத்துகிறது. சிறிலங்காவின் சிங்கள பௌத்த தீவிரவாதம் திரும்பி வரமுடியாததோர் உச்ச நிலையில் இறுகிப் போய்விட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.

தேர்தலில் எவர் வென்றாலும் சிங்கள பௌத்த இனவாத்துக்குத் தீனி போடும் புறநிலைமைகளே உள்ளன. இதனால் சிங்கள இனவாதம் தமிழ் முஸ்லீம் மக்களை தொடரந்தும் குறிவைத்துத் தாக்கவே செய்யும்.

இதனால் தமிழ் முஸ்லீம் மக்கள் தமக்கிடையிலான ஒருமைப்பாட்டையும் தோழமையுணர்வையும் வளர்க்க்கூடிய வகையில் நாம் செயற்பட வேண்டும்.

தோழர்களே!

அரசவை கூடும் இத் தருணத்தில் நாம் அனைத்துலக சமூகம் முன்பாக முன்மைவத்துச் செயற்பட வேண்டிய நமது அரசியல் நிலைப்பாடுகளைப் பற்றியும் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

எனது 2014 ஆம ஆண்டு மாவீரர் நாள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் இவ் விடயங்களை மீண்டும் இவ் இடத்தில் வெளிப்படுத்த விரும்புகிறேன்.

1. தமிழீழ மக்களது தேசத் தகைமையும் தாயகப்பிரதேசமும் அங்கீகரிக்கப்பட்டு, தமிழீழ மக்கள் சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடைய மக்களாக ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

2. ஈழத் தமிழர் தேசத்தின் தேசிய இனப்பிரச்சனைக்கு ஜனநாயக வழியில் தீர்வுகாண்பதற்காக தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான தீர்வுமுறை குறித்து தமிழர்
தாயகத்திலும் புலம் பெயர் தமிழ்மக்கள் மத்தியிலும் மக்கள் வாக்கெடுப்பொன்று அனைத்துலக சமூகத்தின் பங்கு பற்றலோடு நடாத்தப்பட வேண்டும்.

3. தமிழீழ மக்கள் மீது சிங்களத்தால் நடாத்தப்பட்ட, நடாத்தப்படுகின்ற இனஅழிப்புக் குறித்து அனைத்துலக விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.

4. போர் முடிவடைந்த பின்னரும் சிங்களத்தால் மேற்கொள்ளப்படும் இனஅழிப்பினைத் தடுத்து நிறுத்துவதற்கு வழிவகை செய்யக்கூடியதான அனைத்துலகக் கண்காணிப்புப் பொறிமுறையொன்று உருவாக்கப்படவேண்டும்.

5. தமிழீழத் தாயகப் பகுதிகளை ஆக்கிரமித்து நிற்கும் சிங்கள இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த அரசவையில் முக்கியமான திட்டங்கள் பலவற்றறைப் பற்றிக் நாம் கவனம் செலுத்தவுள்ளோம் முக்கியமான தீர்மானங்களையும் நிறைவேற்றவுள்ளோம்.

மொத்தத்தில் தமிழீழ விடுதலைப் போராட்டத்தை முன்னோகி நகர்த்தும் பணியில் இம் அமர்வு காத்திரமானதொரு பங்கை வகிக்கும் என்ற நம்புகிறேன்.

நன்றி,

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரனது உரை அமைந்திருந்தது.

ஈழத்தமிழர்களின் விருப்பறியும் பொதுசன வாக்கெடுப்பு: செயன்முறை நோக்கிய களத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

ஈழத்தமிழர்களின் அவர்களின் அரசியல் விருப்பினை அறியும் கருத்தறியும் பொதுசன வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட வேண்டும் என்ற விடயம் முக்கிய பேசு பொருளாக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற இரண்டாம் நாள் அமர்வில் விவாதிக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா தொடர்பிலான அனைத்துலக விசாரணையின் முடிவுகளை எவ்வாறு அரசியல் ரீதியாகவும் சட்டரீதியாகவும் , தமிழர்களின் நலன்களை வென்றெடுக்கும் வகையில் கையாள்வதென்றும், அதனை அனைத்துலக பீடங்களின் உறுதுணையுடன் பொதுசன வாக்கெடுப்பு நோக்கிக் கொண்டு செல்வது தொடர்பிலும் விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் இருந்து நேரடியாக இந்த அமர்வில் பங்கெடுத்துள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் வளக்கறிஞர் குழுப்பிரதி பேராசிரியிர் மணிவண்ணன் அவர்கள் , இது தொடர்பில் விரிவான ஆய்வுரையொன்றினை சபையில் முன்வைத்திருந்தார்.

அனைத்துலக மட்டத்தில் பொதுசன வாக்கெடுப்பு குறித்தான கருத்துருவாக்கினை ஏற்படுத்துவது இச்செயற்பாட்டின் முக்கியமான விடயம் என பேசப்பட்டிருந்தது.

பொதுசன வாக்கெடுப்பு தொடர்பில் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மத்தியில் ஓர் பொதுகருத்தொற்றையினை காண்பது மற்றும் இலங்கையின் வட மாகாணசபையில் பொதுசன வாக்கெடுப்பு குறித்தான ஒர் தீர்மானத்தினை கொண்டுவரு ஊக்குவிப்பது தொடர்பிலும் கருத்துப்பரிமாறப்பட்டது.

குறிப்பாக ஸ்ரீலங்கா 6வது அரசியல் அமைப்பு சட்டம், தமிழர்கள் தங்கள் தங்களின் அரசியல் பெருவிப்பினை வெளிப்படையாக முன்வைக்க மறுக்கின்ற நிலையில், தங்களின் அரசியல் பெருப்பினை வெளிப்படுத்த பொதுசன வாக்கெடுப்பென்னும் விடயத்தினை வெளிக்கொணர்வது முக்கியம் என குறித்துரைக்கப்பட்டிருந்தது.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது 2015ம் ஆண்டுக்கான முதன்மை வேலைத்திட்டங்களின் ஒன்றாக பொதுசன வாக்கெடுப்பு விவகாரத்தினை கையில் எடுத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

More from our blog

See all posts