கறுப்பு யூலையினை நினைவேந்தி கனடாவில் இடம்பெற்ற கருத்தரங்கு !

  • August 7, 2014
  • TGTE
blackjuly_canada_002ஈழவிடுதலைப் போராட்டத்தின் தடத்தில் இரத்தம் தோய்ந்த சிங்களத்தின் இனஅழிப்பின் வரலாற்றுப் பதிவாகவுள்ள கறுப்பு யூலை 1983 இனப்படுகொலையினை நினைவேந்தி, கருத்தரங்கமொன்று கனடாவில் இடம்பெற்றுள்ளது.

ரொறன்ரோ ஸ்காப்பரோ சிவிக் சென்றிரில் இடம்பெற்றிருந்த இந்த கருத்தரங்கினை, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்பாடு செய்திருந்தது.

படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவேந்தி மலர் மரியாதையோடு தொடங்கிய இந்நிகழ்வில், 1983ல் பாதிக்கப்பட்ட நேரடிச் சாட்சியப் பதிவினர் பலர் தங்களது அனுபவங்களை பதிவு செய்திருந்தமை முக்கியமானதாக அமைந்திருந்தது.

தொடர்ந்து உரையரங்கில் ஈழவேந்தன், இராஜேந்திரம் பாலசுந்தரம், சந்திரசேகரன், சு.இராஜரட்னம், சட்டத்தரணி ஹரிணி சிவலிங்கம், மார்க்கம் கல்விச் சபை உறுப்பினர் யுனித்தா உட்பட பலர் கருத்துரைகளை வழங்கியிருந்தனர்.

கனடியத் தமிழர் பேரவை டேவிட் பூபாலபிள்ளை,சட்டத்தரணி ஹரி ஆனந்தசங்கரி, சந்திரஹாசன் அடிகளார் உட்பட பலரும் பங்கெடுத்திருந்த நிகழ்வின் கருத்துரைகளின் தொகுப்பு

கருத்தரங்கினை தலைமையேற்ற நடத்திய சமூக அரசியல் செயற்பாட்டாளர் வின். மகாலிங்கம்:

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு யூலை மாதம் தமிழினத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு சிங்கள அரசின் திட்டமிட்ட செயலாகும்.

1983 இல் இடம்பெற்ற கலவரத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பலகோடி பெறுமதியுள்ள சொத்துக்கள் நாசமாக்கப்பட்டன. தமிழர்களது பொருளாதாரத்தை அழிப்பது அரசின் நோக்கமாக இருந்தது.

இச்சம்பவம் நடைபெற்று 31 ஆண்டுகளாகிவிட்ட போதிலும் அந்த திட்டமிட்ட இன அழிப்பை மறவாது இன்றும் நாம் அந்த நாளைத் துக்க நாளாகக் கடைப்பிடித்து வருகின்றோம்.

இலங்கையில் வாழும் பெரும்பான்மை சிங்கள – பௌத்தர்கள் இலங்கையை முற்றுமுழுதான ஒரு சிங்கள பௌத்த நாடாக்க முயற்சி செய்து வருகிறார்கள்.

சிங்கள – பௌத்த நாட்டில் வேறு இனத்தவருக்கும் மதத்தவருக்கும் இடம் இல்லை என்ற கோட்பாட்டுடனேயே இலங்கையிலுள்ள சிறுபான்மை தேசிய இனமான தமிழினத்தை அழிக்க சிங்களக் குடியேற்றங்களை அமைத்தும் தமிழர்களைச் சிங்களவர்களாக மாற்றியும் வருகின்றனர்.

1915 ஆம் ஆண்டு முஸ்லெிம் – சிங்களவர்களுக்கு இடையே கலவரம் இடம்பெற்றது. ஒன்பது நாட்கள் நீடித்த இந்தக் கலவரம் மத்திய, வட மேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் சமரகமுவ மாகாணங்களுக்கும் பரவியது.

மாத்தளை, வத்தேகம, கடுகண்ணாவ, கம்பளை, ரம்புக்கன, பாணந்துறை மற்றும் அக்குரச போன்ற நகரங்களில் ஆயிரக்கணக்கான சிங்களவர்கள் ஒன்றுதிரண்டு முஸ்லிம்களையும் அவர்களது கடைகளையும் தாக்கினார்கள்.

சில இடங்களில் முஸ்லிம்கள் சிங்களவர்களைத் திருப்பித் தாக்கினார்கள். இத் தாக்குதலில் 136 முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 205 முஸ்லிம்கள் காயப்பட்டார்கள். நான்கு முஸ்லிம் பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். 85 மசூதிகள் உடைக்கப்பட்டன. 250 கடைகள், வீடுகள் எரியூட்டப்பட்டன. 4,075 கடைகள், வீடுகள் சூறையாடப்பட்டன. 17 கிறித்தவ தேவாலயங்களும் எரிக்கப்பட்டன.அதன் பின்னர் 1956, 58, 71, 77,79, 81, 83 களில் தமிழினத்தின் மீது இனக் கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன.

எங்களுடன் இணைந்து வாழ முடியாவிடின் எங்களைத் தனியாகப் பிரிந்து செல்ல அனுமதிக்குமாறு தானே நாம் கோருகின்றோம். அதற்கும் அவர்கள் இணங்குவதாக இல்லை.

சமூக அரசியற் செயற்பாடாளர் திரு.தங்கவேலு (நக்கீரன்) :

1983 ஆம் ஆண்டு இனக்கலவரத்தின் போது பௌத்த பிக்குகள் தேர்தல் பட்டியலைக் கையில் வைத்துக் கொண்டு தமிழ் மக்களது வீடுகளை அடையாளம் காட்ட சிங்களவர்கள் அந்த வீடுகளைத் தீக்கிரையாக்கியும் அங்கிருந்தவர்களை தாக்கிக் கொலை செய்தனர்.

முதலாவது உலக யுத்தத்தின் போது (1915 -1918) துருக்கியில் வாழ்ந்த பத்து இலட்சம் ஆர்மேனிய மக்கள் துருக்கியர்களினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். சிரியாவுக்குத் தப்பியோடிய ஆர்மீனியர்களில் பலர் வழியில் குடிக்கத் தண்ணீர் இல்லாது இறந்து போனார்கள்.

மீண்டும் 1920 -1923 வரையான காலத்தில் ஆர்மீனியர்கள் இனப் படுகொலைக்கு ஆளானார்கள். 1915 – 1923 இடைப்பட்ட காலத்தில் 15 இலட்சம் ஆர்மீனியர்கள் கொல்லப்பட்டனர். அவர்களது வீடுவாசல்கள் துருக்கிய தேசியவாதிகளால் அபகரிக்கப்பட்டன.

அதே போன்று எகிப்திய மன்னரினால் அடிமைகளாகப் பிடிக்கப்பட்ட யூத மக்கள் துன்புறுத்தப்பட்டனர். சடுதியாக ஒருநாள் இரவோடு இரவாக அவர்கள் எகிப்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மோசஸ் தலைமையில் வெளியேறிய மக்கள் ரொட்டி சுட வைத்திருந்த புளிக்காத மாவை கையில் எடுத்துக் கொண்டு வெளியேறினார்கள். வழி நெடுக அந்த மாவினால் செய்த ரொட்டியை வெய்யிலில் காயவைத்து சாப்பிட்டார்கள். அந்த அனுபவத்தை யூத மக்கள் மறந்து விடாது இன்றும் “பாஸ் ஓவர்” என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் ஏழு நாட்கள் விரதம் அனுஷ்டித்து வருகின்றனர்.

தமது முன்னோர் போன்று காயவைத்த ரொட்டியை மட்டும் சாப்பிடுகிறார்கள். கசப்பான மரக்கறிகளைச் சமைத்து ரொட்டியோடு சாப்பிடுகிறார்கள். அதேபோன்று நாமும் கறுப்பு ஜுலை தினத்தை மறந்து விடாது ஒவ்வொரு ஆண்டும் அன்றைய நாளில் விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

ஐ.நா.மேற்கொண்டு வரும் இனப்படுகொலை சம்பந்தமான விசாரணைக்கு நாம் போரினால் பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களை சமர்ப்பிக்க வேண்டும். அந்தச் சாட்சியங்களை நெறிப்படுத்த சிறந்த சட்டத்தரணிகளை அமர்த்த வேண்டும்.

சட்டத்தரணிகளுக்குப் பணம் கொடுக்க கனடிய தமிழர் பேரவை, நாடு கடந்த தமிழீழ அரசு போன்ற அமைப்புக்கள் நிதி திரட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’ என வேண்டுகோள் விடுத்தார்.

மலையகத்தைச் சேர்ந்த ஆசிரிய பயிற்சிக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளரும், எழுத்தாளருமான சந்திரசேகரன்:

1983 ஆம் ஆண்டு கொழும்பில் மாத்திரமல்ல மலையகத்திலும் இனப்படுகொலைச் சம்பவங்கள் நடைபெற்றன. நான் மலையகத்தில் ராகலை என்ற இடத்தைச் சேர்ந்தவன் ஆனால் எனது சகோதரி வெலிமடையில் இருந்தார்.

அங்கேயும் அட்டூழியங்கள் நடைபெறுகின்றன என்பதனைக் கேள்விப்பட்டதும் நான் ஒரு சிங்களவரைப் போன்று சாறம் அணிந்து சிங்களத்தைப் பேசியவாறு அங்கு பஸ்ஸில் சென்றேன்.

வழியில் அமைச்சராக இருந்த காமினி திசநாயகாவும் அவரது ஆட்களும் நுவரேலியா என்ற நகரில் தமிழ் மக்களின் வீடுகள், கடைகளுக்கு தீ மூட்டி எரித்ததை நேரில் பார்த்தேன். எனது தங்கையின் வீடும் எரிக்கப்பட்டதனால் அவர்கள் காட்டுக்குள் ஓடி பற்றைகளுக்கு இடையே ஒளித்திருந்தனர். எனது உறவினர்கள் பலரும் கொல்லப்பட்டார்கள். விடுதலைப் போராட்டத்தில் மலையகத்தினைச் சேர்ந்த பலரும் பல இயக்கங்களில் சேர்ந்து போராடினார்கள்.

1948 ஆம் ஆண்டு மலையக மக்களின் குடியுரிமை பறிக்கப்பட்ட போது இலங்கைத் தமிழர்களுக்கு நடந்ததுதான் ஏனைய தமிழ் மக்களுக்கும் ஏற்படும் என தந்தை செல்வா அவர்கள் கூறினார். அது உண்மையாகி விட்டது என்றார்.

அவரது உரையினைத் தொடர்ந்து பலாலி ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபர் கந்தையா சிவநாதன் உரையாற்றிய போது,

1990 ஆம் ஆண்டின் பின்னர் உலகெங்கும் 29 நாடுகள் புதிதாக உருவாகியுள்ளன. அந்தந்த நாடுகளில் வாழ்ந்த மக்கள் போராட்டம் நடாத்தியே அவற்றை உருவாக்கி இன்று சுதந்திரமாக வாழ்கின்றர்கள். இன்று தெலுங்கானா மாநிலம் ஆந்திராவை விட்டுப் பிரிந்து தனி மாநிலம் ஆகிவிட்டது.

உக்ரைனில் இருந்து கிரிமியா பிரிந்து  ரஷ்யாவோடு சேர்ந்து கொண்டது. இவை எல்லாம் எமக்கு நல்ல பாடங்களாகும்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமும் இன்று எமது மக்கள் இழந்த சுதந்திரத்தைத் மீளப் பெறப் போராடி வருகின்றன. அதற்குப் பொது மக்களாகிய நாமும் பூரண ஆதரவினைக் கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

More from our blog

See all posts