தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுங்கள் : பிரதமர் !

  • July 24, 2015
  • TGTE

சிறிலங்காவின் பொதுத்தேர்தலில் தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு மக்கள் தமது பிரதநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டுகின்றோம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அறைகூவல் விடுத்துள்ளார்.

இத் தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய ஐந்து கொள்கை நிலைப்பாடுகள் சிலவற்றை மக்கள் முன்வைத்துள்ள பிரதமர் வி.உருத்திருகுமாரன், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினைப் பொறுத்த வகையில் இத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் வாக்களியுங்கள் என்று மக்களைக் தாம் கோரப்போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையின் முழுவடிவம் :

தமது கொள்கை நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி அவற்றின்படி சொல்லிலும் செயலிலும் இயங்குபவர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுங்கள்!

சிறிலங்காவின் நாடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தல் வரும் ஓகஸ்ற் மாதம் 17ஆம் நாள் நடைபெறுகிறது. இத் தேர்தல் தமிழர் தாயகப் பகுதிகளிலும் இடம் பெறுவதால் மக்கள் எத்தகையவர்களைத் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கருதுகிறது என்பதனை இத் தருணத்தில் மக்களுக்குத் தெளிவு படுத்த நாம் விரும்புகிறோம் இவ் விடயம் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையும் அமைச்சரவையும் கூடி விவாதித்து எடுத்துக் கொண்ட முடிவுகளை இவ்வறிக்கை மூலமாக மக்களுக்கு அறியத் தருகிறோம்.

சிறிலங்காவின் நாடாளுமன்றத்தில் தமிழ் உறுப்பினர்கள் அங்கம் வகிப்பது சிறிலங்கா அரசின் சிங்கள பௌத்த இனவாத குணாம்சங்களை மாற்றியமைத்து விடப் போவதில்லை. சிறிலங்காவின் நாடாளுமன்றமே சிங்கள இனவாதத்தின் மையமாக இருந்து வருவதையும் தமிழ் மக்கள் நன்கறிவார்கள். சிங்கள பௌத்த மேலாண்மையை நிலைநிறுத்தும் சட்டங்களும், தமிழ் மக்களின் தேசிய வாழ்வைச் சிதைக்க வழிவகை செய்யும் சட்டங்களும் இந் நாடாளுமன்றத்திலேயே நிறைவேற்றப்படுகின்றன. இவ் வரலாற்றுக் காரணங்களின் பின்னணியில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதனாலும், நாடாளுமன்ற உறுப்பினர்களாவதிலும் என்ன பயன் இருக்கிறது என்ற கேள்விகளும் கூட மக்கள் பலர் மனதில் உண்டு. மேலும் தமிழ் மக்களின் கருத்துச் சுதந்திரத்தை நிராகரிக்கும் வகையில் அமைந்த 6வது திருத்தச் சட்டத்துக்கமைய உறுதிமொழி எடுத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டியிருப்பதனையும் கொள்கைசார் முரண்பாடாகப் பார்க்கும் பார்வையும் பலரிடத்தில் உண்டு.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தமிழ் மக்களின் அரசியற்தீர்வு குறித்து மக்கள் சுதந்திரமாக விவாதித்து முடிவெடுக்க வழிவகை செய்யும் வகையில் சிறிலங்காவின் அரசியலமைப்பின் 6வது திருத்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை உறுதியாகக் கொண்டுள்ளது. இருந்த போதும் தமிழ் மக்கள் நாடாளுமன்றத் தேர்தலில் தந்திரோபாய அடிப்படையில்; பங்கு பெறுவது அவசியம் என்றே நாம் கருதுகிறோம். தேர்தல் வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப் படுபவர்களையே மக்கள் பிரதிநிதிகளாக அனைத்துலக சமூகம் கருதுவதனால்; தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னோக்கி நகர்த்தக் கூடியவர்களை மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்தல் இங்கு அவசியமானது.

தற்போது நடைபெறவுள்ள தேர்தல் ஜனவரி 8ஆம் திகதி நடந்தேறிய ஜனாதிபதித் தேர்தலின் பின்னர்; நடைபெறும் முதலாவது பொதுத் தேர்தலாகும். இப் பொதுத் தேர்தல் ஆட்சி மாற்றத்தின் பின் குறுகிய காலத்தில் இடம் பெறுவதனால் இதனை ஆட்சி மாற்றத்தின் தொடர்ச்சியாகக் கருதுவோரும் உளர். தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினையை ஒற்றையாட்சிக்குட்பட்ட வகையில் கையாள்வதும் தமிழின அழிப்புக்கெதிரான அனைத்துலக விசாரணைக்குப் பதிலாக அதனை உள்நாட்டு விசாரணையாகச் சுருக்கிக் கொள்வதும் ஆட்சி மாற்றத்தின் பின் பதவிக்கு வந்தோரினது திட்டங்களாகவே உள்ளன. இந் நிலையில்; எந்தச் சிங்களக் கட்சியின் தலைமையிலான அரசாங்கம் ஆட்சிபீடம் ஏறினாலும் அவர்கள் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்தினைப் பாதுகாப்பவர்களாகத்தான்; இருப்பார்கள் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிரப்பக்கூடிய தீர்வு எதனையும் 2016ஆம் ஆண்டுக்குள் பெறமுடியும் எனத் தமிழர் தலைமைகள் கற்பனையில் மூழ்கக்கூடாது. மக்கள் மத்தியில் பொய்யான நம்பிக்கைகளை விதைக்கவும் கூடாது.

தமிழ் மக்கள் தமது உரிமைகளை வென்றெடுப்பதில் உறுதியாகவும் விழிபு;புணர்வுடனும் இருக்க வேண்டும். எம்மை சிங்களத் தலைமைகள் மட்டுமல்ல, தமிழ்த் தலைமைகளும் ஏமாற்றுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது. தமக்கு உண்மையாகவும் விசுவாசமாகவும் இருக்கக்கூடியவர்களை இத் தேர்தலில் மக்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஒவ்வொரு தவறான முடிவுக்கும் நாம் பின்னர் விலை கொடுத்தாக வேண்டும் என்பதனையும் மக்கள் கவனத்திற் கொள்வார்கள் என்றே நாம் நம்புகிறோம்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினைப் பொறுத்த வகையில் நாம் இந் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் வாக்களியுங்கள் என்று மக்களைக் கோரப் போவதில்லை. தேர்தலுக்குப் பின்னர் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்கு ஈழத் தமிழர் தேசம் அரசியல் இராஜதந்திர வழியில் தீவிரமாகப் போராட வேண்டிய நிலை வரும். தமிழின அழிப்புக்கு எதிரான அனைத்துலக விசாரணையை உள்நாட்டு விசாரணையாகச் சுருக்கும் முயற்சிக்கு எதிராகக் கடுமையாகப் போராட வேண்டி வரும். இப் போராட்டத்தில் ஈழத் தாயகம், புலம் பெயர் தமிழ் மக்கள், தமிழகம் மற்றும் உலகத் தமிழ் மக்கள் அனைவரும் கைகோர்த்து ஈடுபட வேண்டியது அவசியமானதாக இருக்கும். இதனால் இத் தேர்தலில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக உண்மையாக உழைக்கக்கூடியவர்களை மக்கள் தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். இத்தகையவர்களை அடையாளம் காண்பதற்கு அவர்கள் முன்வைக்கும் கொள்கைகளை, நிலைப்பாடுகளை மக்கள் கவனமாகப் பரிசீலிக்க வேண்டும். அவர்களது சொல்லிலும் செயலிலும் ஒருமைப்பாடு உண்டா என்பதனையும் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

இத் தேர்தலில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் போது கவனத்திற் கொள்ள வேண்டிய கொள்கை நிலைப்பாடுகள் சிலவற்றை நாம் மக்கள்முன் வைக்க விரும்புகிறோம். இவற்றைக் கவனத்திற்;கொண்டு தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யுமாறும் மக்களை நாம் வேண்டிக் கொள்கிறோம்.

1. எந்தவொரு அரசியல் தீர்வும் திம்புக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும். வட மாகாணசபை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்கள் இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தியுள்ளமையினை நாம் வரவேற்கிறோம்.

2. தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கான எந்தவொரு அரசியல் தீர்வும் தாயகத்திலும் புலத்திலும் வாழும் ஈழத் தமிழர் தேசத்தவரிடையே மக்கள் வாக்கெடுப்புக்கூடாகத் தீர்மானிக்கப்பட வேண்டும்.

3. தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக விசாரணை நடைபெற வேண்டும் என்பதில் உறுதியாக இருத்தல் வேண்டும். இந் நிலைப்பாட்டின் பிரதிபலிப்பாக வட மாகாணசபையால் நிறைவேற்றப்பட்ட தமிழின அழிப்புத் தீர்மானத்துக்குப் பகிரங்கமாக ஆதரவு வழங்கிச் செயற்பட வேண்டும். அனைத்துலக நிபுணர்கள் பங்கு பற்றும் விசாரணைப்பொறிமுறை எதுவும் சிறிலங்கா சட்டங்களுக்கு அமைய நடைபெறலாமெனப் பரிந்துரைக்கப்படின் அதனை உள்நாட்டு விசாரணையாகவே கருதி நிராகரிக்க வேண்டும்.

4. சிறிலங்கா பௌத்த பேரினவாத அரச கட்டமைப்பால் ஈழத் தமிழர் தேசம் மீது தொடர்ந்து மேற்கொள்ளப்படும் கட்டமைப்புசார் இனஅழிப்பைத் தடுத்து நிறுத்தவும், புலம் பெயர் மக்கள் அச்சமின்றித் தமிழர் தாயகப் பகுதியின் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபடத் துணை செய்யும் வகையிலும் அனைத்துலகப் பாதுகாப்புப் பொறிமுறையொன்று அமைக்கப்பட வேண்டும்.

5. தமிழர் தாயகப் பகுதியில் இருந்து சிறிலங்கா இராணுவத்தினர் வெளியேற்றப்பட வேண்டும்.

இந்த ஐந்து நிலைப்பாடுகளையும் ஏற்று அவற்றின்படி சொல்லால் மட்டுமன்றி செயலாலும் உண்மையாக, விசுவாசமாக இயங்குபவர்கள் யார் என்பதனை அடையாளம் கண்டு அவர்களைத் தங்கள் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்குமாறு மக்களை இத்தருணத்தில் வேண்டிக் கொள்கிறோம்.

நன்றி, தமிழரின் தாகம் தமிழரின் தாயகம்
இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from our blog

See all posts