மலையகத்தில் நிகழ்ந்த பாரிய இயற்கை அனர்த்தம் தொடர்பாக பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள இரங்கற் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கடந்த புதன்கிழமை 29.10.2014 அன்று நிகழ்ந்த இந்தப் பாரிய அனர்த்தத்தில் மீரியபத்த தோட்டக் கிராமத்தைச் சேரந்த 66 குடும்பங்களின் குடியிருப்புக்கள் முற்றாக மண்ணுள் புதையுண்டு போனதாகவும், தங்கள் குடிமனைகளில் தங்கியிருந்த அனைவரும் இதில் சிக்கிக் கொண்டதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக மீட்புப் பணிகளையும் துரித கதியில் மேற்கொள்ள முடியவில்லை என்ற தகவலும் மிகவும் கவலையைத் தருகிறது. பாடசாலைகளுக்குச் சென்றிருந்த பிள்ளைகள் இந்த இயற்கை அனர்த்தத்தில் இருந்து உயிர் தப்பிக் கொண்டுள்ளமை பெரும் ஆறுதலைத் தருகிற போதும், அவர்களிற் பலர் தமது பெற்றோர்களையும் உறவினர்களையும் இழந்து விட்டார்கள்; எனும் தகவலும் நமது வேதனையை அதிகப்படுத்துகிறது.

மிகுந்த கடினமான வாழ்க்கைச்சூழலில் வாழ்ந்து வரும் மலையகத் தமிழ் மக்களை இயற்கையும் இவ்வாறு தண்டித்திருப்பது வருத்தத்துக்கு உரியதாகவுள்ளது. மலையகத் தமிழ் மக்களின் வாழ்விடம் மற்றும் வாழ்க்கைச் சூழலில் பாரிய மேம்பாட்டினைச் செய்ய வேண்டிய அவசியத்தையும் இத் துக்க நிகழ்வு சுட்டி நிற்கிறது.

இந்தப் பாரிய இயற்கை அனர்த்தத்தில் உயிரிழந்த மலையக உடன்பிறப்புகளுக்கு மரியாதை வணக்கம் செலுத்தும் முகமாக வியாழக்கிழமை 30ம் திகதி முதல் ஒரு வார காலத்தைத் துக்க வாரமாக நினைவுகூருமாறு ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவரது வேண்டுகோளை மதிப்புடன் ஏற்றுக் கொள்கிறது. இத் துக்க வார காலத்தில் தமிழர்கள் பரந்து வாழும் புலம்பெயர் தேசங்களில் உள்ள வழிபாட்டு தளங்களில், உயிரிழந்த மக்களை நினைவுகூர்ந்து வேண்டுதல்களையும் பிரார்த்தனைகளையும் ஏற்பாடு செய்யுமாறு எமது மக்களை நாம் கேட்டுக் கொள்கிறோம்.

இந்த இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வை மீட்டெடுக்கும் புனர்வாழ்வுப் பணிகளுக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது முழுமையான ஆதரவை வெளிப்படுத்துகிறது.

சிறிலங்கா அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்ட அரசியல்பீடமாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உள்ள காரணத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வு முயற்சிகளில் எம்மால் நேரடியாகப் பங்கேற்க முடியாதிருப்பதையிட்டு நாம் விசனமடைகின்றோம்.

இந்தப் பாரிய இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் புனர்வாழ்வுப் பணிகட்கு பூரண ஆதரவினை வழங்குமாறு புலம்பெயர் மக்கள் மத்தியில் இயங்கும் உதவி அமைப்புக்கள், தமிழ்ச் சங்கங்கள், கோவில்கள், ஆலயங்கள், ஊர்ச் சங்கங்கள், பழைய மாணவர் சங்கங்கள் போன்ற அமைப்புக்களையும் நாம் வேண்டிக் கொள்கிறோம் என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது இரங்கற் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.