சிறிலங்காவின் தற்போதைய இனஅழிப்பில் இரண்டு முக்கிய திட்டங்கள் : விளக்குகிறார் பிரதமர் வி.உருத்திரகுமாரன் !

தொடர்ந்தும் தமிழின அழிப்பினை தொடர்ந்த வண்ணமே உள்ளதென தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டு இவைகள் மேற்கொள்ளப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மே-18 தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியிலே நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

சிறிலங்காவின் இனஅழிப்புத்திட்டத்தில் ஒன்று, ஈழத் தமிழர் தேசத்தின் தேசத் தகைமையினை அவர்களிடம் இருந்து மெல்ல மெல்ல பறித்தெடுத்து, அவர்களை உதிரித் தமிழர்கள் ஆக்குவது. இரண்டாவது இவ்வாறு உதிரிகளாக்கப்பட்ட தமிழர்களை சிங்கள மேலாதிக்கத்தை இயல்பாக ஏற்றுக் கொள்ள வைத்து இவர்களை சிங்களத் பெருந்தேசியத்துடன் கரையச் செய்வது என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் வி.உருத்திரகுமாரனின் தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியின் முழுவடிவம் :

அன்புக்கும் மதிப்புக்கும் உரிய தமிழீழ மக்களே, உலகத் தமிழ் உறவுகளே!

இன்று தமிழீழ தேசிய துக்க நாள்.

முள்ளிவாய்க்காலில் சிங்களம் நிகழ்த்திய தமிழினஅழிப்பின் 7 வது ஆண்டு நினைவு நாள்.

வயது வேறுபாடுகள் ஏதுமின்றி, ஆண், பெண், முதியோர், குழந்தைகள் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, வீடுகளில், வீதிகளில், மருத்துவமனைகளில், கோவில்களில், தேவாலயங்களில், தஞ்சம் புகுந்த முகாம்களில் எங்கும், எல்லா இடங்களிலும் தங்கியிருந்த மக்களை, இவர்கள் தமிழர்களாகப் பிறந்து விட்ட ஒரே காரணத்துக்காக சிங்கள அரசு கொத்துக் கொத்தாய்க் கொன்று குவித்தமைக்கு இரத்த சாட்சியமாக அமையும் நாள்.

முள்ளிவாயக்க்கால் தமிழின அழிப்பில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்டிருக்கின்றனர். சுமார் மூன்று இலட்சம் மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டிருந்தனர். தடுப்பு முகாம்களில் இருந்து பிடித்தச் செல்லப்பட்ட பலர் பின்னர் படுகொலை செய்யப்பட்டனர். பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கபட்டு சிதைக்கப்பட்டனர்.

ஊடகவியலாளர் பிரான்சிஸ் கரிசன் குறிப்பிட்டது போன்று, மொத்தமாகக் கொல்லப்பட்டவர்கள் தொகை என்ன என்பது பற்றித் தெரியாது. இன்னும் இறந்தவர்கள் தொகையினை எண்ணிக் கொண்டிருக்கும் சமூகமாக ஈழத்தமிழர் தேசம் இருந்து வருகிறது.

இறுதிப் போர்க்காலகட்டத்தில் வன்னி நிலப்பரப்பெங்கும் முள்ளிவாய்க்காலிலும்;, தமிழர் தேசம் மீது சிங்கள அரசு நடாத்திய இனஅழிப்பு, நமது தேசத்தின் ஆன்மாவில் பெரும் துயர வடுவாய்ப் காலா காலாமாய் பதிந்திருக்கும். இப் பெருந்துயர் தலைமுறை தலைமுறையாக தமிழர் தேசத்தின் கூட்டு நிiவுகளில் பொதிந்திருக்கும்..

முள்ளிவாய்க்காலிலும் தமிழர் தேசப்பரப்பெங்கும் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட இனஅழிப்பு நடவடிக்கைகை, ஒரு போரின் இயல்பான விளைவுகள் அல்ல. தவறுதலாக நடந்தவையும் அல்ல. இவை தமிழனத்தை அழிக்கும் நோக்கத்தைக் கொண்ட திட்டமிடப்பட்ட நடவடிக்கைகளே!

இலங்கைத்தீவில் தமிழ்மக்கள் மீதான இனஅழிப்பு என்பது சிறிலங்கா அரசின் ஓர் அரச கொள்கை. (State policy). சிறிலங்கா அரசின் தமிழின அழிப்புத் திட்டம் என்பது ஈழத் தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து, அவர்களின் தாயகபூமியைக் கபளீகரம் செய்து, தமிழன அடையாளத்தைச் சிதைத்து, தமிழர்களின் பொருளாதார வாழ்வைச் சூறையாடி, ஒரு மக்கள் என்ற நிலையில் இருந்து அவர்களை உதிரிகளாக உருமாற்றி விடும் நோக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுளது.

முள்ளிவாய்க்காலில் போரைச் சாக்காக வைத்து, பெரும் எண்ணிக்கையிலான தமிழ்மக்களைக் கொன்று தள்ளிய சிங்களம், இப் படுகொலைகளின் ஊடாக தமிழ் மக்கள் தம்மைத் ஒரு தேசமாக அடையாளப்படுத்தும் வேட்கையினை இல்லதொழிக்க முயன்றது.

தமக்கென ஒரு தனியரசினை அமைத்துக் கொள்ளும் பெருவிருப்பினை ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் இருந்து அகற்றிவிட முனைந்தது. தமிழர் அடையாள அரசியலை தமிழர் மத்தியில் இல்லாதொழித்து, சிங்கள பெரும் சமூக அரசியலுக்குள் தமிழர் அரசியலை கரைக்க முனைந்தது.

தமிழின அழிப்பு என்பது சிங்கள அரசின் கொள்கையாக இருக்கும் காரணத்தால், எந்தச் சிங்களக் கட்சிகளின் தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்தாலும் இந்த அரச கொள்கைளில் மாற்றம் ஏற்படப் போதில்லை.

மகிந்த இராஜபக்சாவாக இருந்தாலும் சரி, மைத்திரபால சிறிசேனவாக இருந்தாலும் சரி, ரணில் விக்கிரமசிங்காவாக இருந்தாலும் சரி அல்லது எதிர்காலத்தில் வரக்கூடிய எந்த சிங்களத் தலைவராக இருந்தாலும் சரி, சிங்கள அரசின் தமிழின அழிப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்தவர்களாகவே இருப்பார்கள்.

இவர்களுக்கிடையே அணுகுமுறை வேறுபடக்கூடுமே அன்றி, தமிழின அழிப்பு என்ற அடிப்படைக் கொhள்கையில் வேறுபாடு எதுவும் இருக்கப் போவதில்லை. கடும்போக்கைக் கொண்ட சிங்களத் தலைவர்கள் மட்டுமல்ல, அனைத்துலக நல்லாட்சி பேசி நன்முகம் காட்டியவாறு சிங்கள அரசின் இனஅழிப்புக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவர்களும் ஆபத்தானவர்களே.

உதாரணத்துக்கு ஒரு விடயத்தை இங்கு எடுத்துக் கொள்வோம். சகோதரர்களை கொன்று விட்டு வெற்றி விழா கொண்டாட முடியாது என்று சிறிங்காவின் பாதுகாப்புச் செயலாளர் கூறுகிறார். இந்த உணர்வு உண்மையாக இருக்கும் பட்சத்தில், கொல்லப்பட்டு அனைத்துச் சகோதரர்களுக்கும், அவர்களது பெற்றோர் உறவினர் மக்கள் வணக்கம் செலுத்த அனுமதிக்க வேண்டும். மாவீர்கள் துயிலும் இல்லங்களை மக்கள் பேண அனுமதிக்க வேண்டும். சகோரர்களை கொன்றவர்களை அனைத்துலன நீதியின் முன்னால் நிறுத்த முன்வர வேண்டும் . இவ்வாறு செய்வதற்கு சிறலங்கா அரசின் எந்தத் தலவர்களாவது தயராக உள்ளார்களா?

தற்போதும் சிறிலங்கா அரசின் தமிழின அழிப்பு தொடர்ந்த வண்ணம்தான் உள்ளது. தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து நின்றவாறு, சிங்கள இராணுவம் இன்றும் ஆக்கிரமித்து நிற்பது இந்த இனஅழிப்புத் திட்டத்தின் பாற்பட்டுத்தான்.

இவ்வாறு மேற்கொள்ளப்படும் இனஅழிப்புத்திட்டத்தில் இரண்டு முக்கிய அம்சங்கள் உண்டு. ஒன்று, ஈழத் தமிழர் தேசத்தின் தேசத் தகைமையினை அவர்களிடம்; இருந்து மெல்ல மெல்ல பறித்தெடுத்து, அவர்களை உதிரித் தமிழர்கள் ஆக்குவது.
இரண்டாவது இவ்வாறு உதிரிகளாக்கப்பட்ட தமிழர்களை சிங்கள மேலாதிக்கத்தை இயல்பாக ஏற்றுக் கொள்ள வைத்து இவர்களை சிங்களத் பெருந்தேசியத்துடன் கரையச் செய்வது.

இவை ஈழத் தமிழர் தேசத்தை இலங்கைத்தீவில் இல்லாது அழிக்கும் நோக்கத்தை தன்னகத்தே கொண்டு வடிவமைக்கப்பட்ட இனஅழிப்புத் திட்டங்களாகும்.

இத் திட்டங்கள் முழுமையாக நிறைவேறும் போது, இலங்கைத் தீவில் தமிழர்கள் இருப்பார்கள். ஆனால் ஈழத் தமிழர் தேசம் இருக்காது. இலங்கைத் தீவில் வட கிழக்குப் பிரதேசங்கள் இருக்கும். ஆனால் அவை தமிழர் தாயகப் பிரதேசங்களாக இருக்க மாட்டாது. தமிழத் தேசியக் கூட்டுமைப்போ அல்லது வேறு எந்தத் தமிழ்க் கட்சிகளோ தமிழ் மக்களைப் அரசியல்ரீதியாகப் பிரதிநித்துவப்படுத்தும் நிலை இருக்காது. மாறாக தமிழ்மக்கள் சிறிலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி அல்லது வேறு எந்தத் சிங்களக் கட்சிக்கோ வாக்களிப்பவர்களாக இருப்பார்கள்

இந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்குத் தேவையான திட்டங்களை காலத்துக்கு ஏற்ற வகையில் நடைமுறைப்படுத்தும் ஆற்றலை சிங்கள அரசு கொண்டுள்ளது.

பெரும் படுகொலைகள் முதற் கொண்டு தமிழ்மக்கள் மீதான சிங்கள தேசத்தின் மேலாண்மையினை நிறுவும் வகையிலாக அனைத்துத் தளங்களிலும் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்தல் (Structural Changes) வரை தமிழின அழிப்புக்கான செயற்பாட்டுத்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

போர்க்காலத்தில் சாத்தியமான அனைத்து இடங்களிலும் பெரும் தமிழனப்படுகொலைகள் திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன. முள்ளிவாய்க்கால் தமிழன அழிப்பு அதன் உச்சக் கட்டமாகும்.

தற்போது பெரும் படுகொலைகளைச் செய்வது நடைமுறைச் சாத்தியம் அற்றதாக இருப்பதனால், கட்டமைப்பு மாற்றங்கள் தீவிரப்படுத்தப் படுத்தப்படுகின்றன.
ஒட்டு மொத்தத்தில் சிங்கள அரசின் தமிழன அழிப்புக் கொள்கை தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டே வருகின்றது.

இந்தத் தமிழின அழிப்புக்கு ஈடு செய் பரிகாரநீதி என்பது, சிங்கள பௌத்த இனவாத அரசின் பிடியில் இருந்து விடுபட்டு, ஈழத் தமிழர் தேசம் தனக்கென சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசொன்றை அமைத்துக் கொள்ளல் என்பதாகவே இருக்க முடியும்.

இதற்கு ஈழத் தமிழ் மக்கள் ஒரு தேசிய இனம் என்பதற்கும், தமிழீழ மக்கள் மீது சிங்கள அரசு இனஅழிப்பு நடவடிக்கைளை செய்கிறது எனும் எமது குற்றச்சாட்டுக்கு ஆதரவாக, நாம் அனைத்துலக ஆதரவினை வென்றெடுத்தல் அடிப்படையானதாக இருக்கும். இதற்காகத் தொடர்சியாகச் செயற்படுதல் மிகவும் அவசியமானதாகும். இதனையே நாம் முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பின் 7 வது ஆண்டு நினைவு நாளின் முக்கிய செய்தியாக மனதில் கொள்ள வேண்டும்.

முள்ளிவாய்க்கால் நினைவுகள் நமது செயற்பாட்டை உயிப்புடனும் வீச்சுடனும் வைத்துக் கொள்வதற்கும், நம்மை நமது இலக்கு நோக்கிச் சிந்திக்கவும் செயற்படவும் வைக்கவும் தரவேண்டிய உந்துசக்தியினைக் நிச்சயமாகத் தரும்.

எமக்காக எமது உயிர்களை ஈகம் செய்தவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, எமது தலைமுறையின் தலையாயா கடமையாகும். ஓர் இலட்சியப் போராட்டத்தில், இப் போராட்டப்பாதையில், இப் போராட்ட காலத்தில் தமது உயிர்களை ஈந்த அனைவரதும் நினைவாக தமிழ் மக்களின் விடுதலை விட்டும் வரை ஓயாது உழைப்போம் என முள்ளிவாக்கால் நினைனைவுகளுடன் உறுதி எடுத்துக் கொள்வோமாக.

தமிழரிகன் தாயகம் தமிழீழத் தாயகம். இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரனின் தமிழீழத் தேசிய துக்க நாள் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from our blog

See all posts