2013-03-10 பிரித்தானியாவின் Million women Rise பேரிணியில்

  • September 16, 2013
  • WCE

அனைத்துலக பெண்கள் நாளை முன்னிட்டு, பிரித்தானியாவின் பல்லினப் பெண்கள் பங்கெடுக்கும் மாபெரும் Million women Rise Walk பேரிணியில் தமிழீழத் தாயகப் பெண்களுக்கான குரல் ஓங்கி ஒலித்தது.

போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்கள படைகளினால் பல்வேறு நெருக்கடிகளையும் – சவால்களையும் எதிர்கொண்டு வருகின்ற தமிழ்பேசும் பெண்களின் சொல்லாணத் துயரங்களையும் அவர்கள் சந்திக்கின்ற சாவால்களையும் வெளிப்படுத்தி நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சிறுவர்-பெண்கள்-முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சு பேரிணியில் இணைந்து கொண்டிருந்தது.

தமிழர் தாயகப் பிரதேசத்தில் அண்ணளவாக 90 000 தமிழ்ப்பெண்கள் யுத்தத்தினால் விதவைகளாக்கப்பட்டு சிறிலங்கா படையினரின் தொடர்ச்சியான பாலியல் அத்துமீறல்களையும் அச்சுறுத்தல்களையும் எதிர்கொண்டு வருகின்றமை இங்கு சுட்டிக்காட்டப்பட்டதோடு பெண்கள் தொடர்பில் பல்வேறு மனித உரிமை அமைப்புக்கள் வெளிக்கொணர்ந்த விடயங்களின் சாரங்களை உள்ளடக்கியதான பரப்புரை துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டிருந்தன.

பெண்கள், சிறுவர், முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் இதில் பங்கெடுத்திருந்தார்.

நீண்ட பேரணியின் நிறைவில், தமிழீழ அரசாங்கத்தின் சார்பில் உரையொன்றும் நிகழ்த்தப்பட்டது.

2007ம் ஆண்டு தொடங்கப்பட்ட Million women Rise Walk பேரணியானது, பெண்கள், மகளிர் அமைப்புக்கள், பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்களென பெண்கள் மட்டுமே பங்கெடுக்கும் பிரித்தானியாவின் பிரபல்யமிக்க பேரணியாக உள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.

-நாதம் ஊடகசேவை-

 

More from our blog

See all posts