ஈழத்தமிழர்களுக்கு நிவாரண உதவி ! தமிழக சட்டசபைத் தீர்மானத்தினை வரவேற்கின்றோம் !

இலங்கைத்தீவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள ஈழத்தமிழ் மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கும் வகையில் இன்று வெள்ளிக்கிழமை தமிழக சட்டமன்றில் ஏகமானதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை வரவேற்கின்றோம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

அத்தியாவசிய பொருட்கள், உயிர்காக்கும் மருந்துகள் ஆகியனவற்றை தமிழ்நாட்டில் இருந்து நேரடியாக இலங்கைத்தீவுக்கு அனுப்பி வைக்கும் வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களினால் தனித்தீர்மானமாக இது முன்மொழியப்பட்டிருந்தது.

இச்சிறப்பு தீர்மானம் தொடர்பில் பேசிய முதல்வர் அவர்கள், இலங்கைத் தமிழர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாடு அரசு உதவ தயாராக உள்ளது. இலங்கைத் தமிழர்களுக்கு உணவு அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாட்டில் இருந்து அனுப்பி வைக்க வேண்டும் இலங்கை தமிழர்களுக்கு உதவிட அனுமதி கோரி தமிழ்நாடு அரசு கடிதம் எழுதியும் மத்திய அரசிடமிருந்து தெளிவான பதில் கிடைக்கவில்லை. இலங்கை தமிழர்களுக்கு மட்டுமல்ல, இலங்கை சிங்களவர்களுக்கும் உதவ தயார் என பேசியிருந்தார்.

பிரதான எதிர்கட்சியான அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் தமது கருத்துக்களை வழங்கியிருந்ததோடு, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேறியது சபாநாயகர் அறிவித்திருந்தார்.

அனைத்துக்கட்சிகளும் ஒருமனதாக நிறைவேற்றியுள்ள இத்தீர்மானத்தினை நன்றியோடு வரவேற்பாதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமைதாங்கி இந்த முயற்சியினை முன்னெடுப்பதனை நன்றியோடு வரவேற்பதாகவும் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் சார்பில் ஈழத்தமிழர் தேசத்தின் உண்மை நிலையையைக் கண்டறிவதற்கான குழு ஒன்றினை அங்கு உடன் அனுப்பி வைப்பதும் இம் முயற்சிக்கு வலுச் சேர்க்கும் என்பதோடு, நேரடி உதவிப் பொறிமுறை ஊடாக ஈழத்தமிழ் மக்களுக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பங்களிப்பை வழங்கும் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு முன்னராக அனுப்பியிருந்த கடிதமொன்றில் தெரிவித்தார்.

https://tgte.tv/v/g7bA1K

More from our blog

See all posts