தாமதிக்கும் நீதியானது மறுக்கப்படும் நீதியாகும் : ஐ.நா விசாரணை அறிக்கை ஒத்திவைப்பு ஏமாற்றமளிக்கின்றது ! வாய்மூல அறிக்கையினை மார்சில் சமர்ப்பியுங்கள் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

  • February 17, 2015
  • TGTE

சிறிலங்கா தொடர்பிலான விசாரணை அறிக்கையினை ஐ.நா மனித உரிமைச்சபை ஒத்திவைத்துள்ளமையானது மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்துள்ள நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், மார்ச் மாத அமர்வில் வாய்மூல அறிக்கையினை சமர்ப்பிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.

சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணைகளின் அறிக்கையை வெளியிடுவதை, ஐ.நா மனித உரிமைகள் பேரவை செப்ரெம்பர் மாதம் வரை ஒத்திவைத்துள்ளமை தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையிலேயே இதனைக்குறிப்பிட்டுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசேன் அளித்த பரிந்துரைக்கு மனித உரிமைகள் பேரவை சிறிலங்கா தொடர்பிலான அறிக்கையினை ஒத்திவைத்துள்ளதாக அறிவித்திருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் விடுத்துள்ள அறிக்கையில், பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, காணாமற்போதல், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள் உட்பட இலங்கையில் நடந்தேறிய மனித உரிமை மீறல்கள் பற்றி முழுமையான விசாரணை அறிக்கையினை ஐ.நா மனித உரிமைச்சபை 25/1தீர்மானம் கோரியிருந்தமையினைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரத்தில், வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தில், தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு குறித்து உரிய விசாரணை செய்யப்பட வேண்டுமென கோரியிருந்ததோடு, வரும் மார்ச் ஐ.நா மனித உரிமைச்சபை அமர்வில் விசாரணை அறிக்கை வெளியிட வேண்டுமெனவும் வேண்டுகோள் விடுத்திருந்தனை சுட்டிக்காட்டியுள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் , ஐ.நா மனித உரிமைச்சபை, இலங்கையில் நடந்தேறிய இனவழிப்பு குறித்த விசரணையில் நம்பத்தகுந்தவாறான எவ்வகை முன்னேற்றமும் இல்லாமையைக் கண்டு வருந்துவதாக தெரிவித்துள்ளார்.

தற்போது சிறிலங்காவில் புதிய அதிபராக பொறுப்பேறுள்ள மைத்திரிபால சிறிசேனா அவர்கள், முள்ளிவாய்க்காலில் நிகழ்ந்த இனவழிப்புப் போரின்போது, அப்போதைய இராசபக்கிசே அரசின் பாதுகாப்புதுறை அமைச்சராக இருந்தாரென்பதும், அப்போது சிறிலங்காவின் இராணுவத்தளபதியாக இருந்த சரத் பொன்சேகா அவர்கள், தற்போது, சிறிலங்கா அதிபருக்கான பாதுகாப்புத்துறை ஆலோசகராக உள்ளார் என்பதனையும் ஐ.நா மனித உரிமைச்சபையின் ஆணையாளர் கருத்தில் கொள்ளுதல் வேண்டும். எனவே, இவ்விருவருமே சிறிலங்காவில் நடந்தேறிய இனஅழிப்பை மூடிமறைக்கவே முற்படுவர் என்றும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் இடித்துரைத்துள்ளார்.

சிறிலங்காவில் இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் தொடர்பில் நம்பத்தகுந்த பொறிமுறையில் சிறிலங்கா அரசாங்கம் தொடர்ச்சியான தோல்விகளை கண்டுள்ளமை தொடர்பில் மனித உரிமைச்சபை தீர்மானம் 25/1 முன்மொழிவில் குறித்துரைக்கப்பட்டுள்ளமையினை சுட்டிக்காட்டிய பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், சிறிலங்காவின் தேசிய செயற்பொறிமுறைகள் தொடர்ந்து உண்மையை நிறுவ மற்றும் நீதி நிறைவேற்றத் தவறிவிட்டது என்பதனையும் அத்தீர்மானத்தின் முன்மொழிவில் விவாதிக்கப்பட்டுள்ளமை குறித்தும் நினைவூட்டியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாத கூட்டத் தொடரில், சிறிலங்காவில் போரின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்தான ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகம் நடத்திய விசாரணையின் வாய்மூல அறிக்கையினை முன்வைக்க கோருவதாக தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இது தொடர்பிலான வெளிப்படையான முழுமையான விவாதத்துக்கும் மனித உரிமைச்சபையினைக் கோரியுள்ளார்.

 

More from our blog

See all posts