சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துக : பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் தொடர் சந்திப்பு ! 

  • October 1, 2015
  • TGTE
சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு வலியுறுத்தும் கோரிக்கையோடு, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் சந்தித்து வருகின்றனர்.சிறிலங்கா தொடர்பில் விசேட சபை ஒன்றினை அமைக்கும் தீர்மானம் ஒன்றினை அமெரிக்க தலைமையிலான கூட்டு நாடுகள் ஐ.நா மனித உரிமைச்சபையில் நிறைவேற்ற எத்தனித்துள்ள நிலையில் இச்சந்திப்புக்கள் இடம்பெற்று வருகின்றன.

சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு கோரி முன்னெடுக்கப்பட்ட மில்லியன் கையெழுத்து இயக்கத்தின் பதின்நான்கு இலட்சம் கையொப்ப மனு இச்சந்திப்புக்களில் கையளிக்கப்பட்டு வருகின்றன.

கோரிக்கை மனுவின் பிரதான விடயமாக,
சிறிலங்கா அரசு தமிழ் மக்களுக்கு எதிராக இழைத்த போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியன தொடர்பில் சிறிலங்காவை சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு நிறுத்துமாறு, அல்லது அதுபோன்ற ஒரு நம்பகமான சர்வதேச விசாரணைப் பொறிமுறை ஒன்றினை நிறுவுமாறு, நாங்கள் வலியுறுத்துகிறோம்.

சிறிலங்கா குறித்த ஐ.நா. உள்ளக மதிப்பீட்டு அறிக்கையின்படி, 2009 ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் 70,000 தமிழ்மக்கள் உயிரிழந்ததாக ‘நம்பகமான மதிப்பீடுகள்’ இருந்தன.

முன்னாள் அமெரிக்க அரசுச் செயலர் ஹிலாரி கிளிண்டன் சுட்டிக்காட்டியுள்ளது போல, வன்புணர்ச்சியைச் ஒரு யுத்தச் செயல்தந்திரமாகப் பயன்படுத்திய போஸ்னியா, பர்மா, கொங்கோ ஜனநாயகக் குடியரசு, சூடான், மற்றும் பிற நாடுகளைப் போன்ற வரிசையில் குறிப்பிடத்தக்க நாடுகளில் ஒன்றாக சிறிலங்கா இருக்கிறது.

ஒரு உள்நாட்டு அமைப்போ அல்லது ஒரு சர்வதேசமும் சிறிலங்காவும் கொண்ட ஒரு மாறுபட்ட அமைப்போ தமிழ் மக்களுக்கு நீதியைக் கொண்டுவராது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எந்த ஒரு சர்வதேச நீதிச் செயல்முறைக்கும் பதிலாக, புதிய சிறிலங்கா அரசாங்கம் ஒரு உள்நாட்டு அல்லது கலப்பு அமைப்பைக் கோருவது, சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தின் முன்பு சிறிலங்கா அரசை நிறுத்தும் கோரிக்கையை திசைதிருப்புகிற, மற்றும் பொறுப்புடைமை குறித்த பிற அர்த்தமுள்ள நடவடிக்கைகளைத் தாமதப்படுத்துகிற முயற்சியாகும். ஒரு உள்நாட்டு உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தை நிறுவும் முயற்சிகள் தமிழர்களுக்கு எதிரான தீவிரமான குற்றங்களைப் புரிந்துள்ளவர்களைப் பாதுகாக்கும் இன்னொரு திசைதிருப்பும் செய்லதந்திரம் ஆகும்.

போர்க்குற்றங்கள், மனித இனத்திற்கு எதிரான குற்றங்கள், மற்றும் இனப்படுகொலை ஆகியவற்றுக்கு முற்றிலும் எந்தப் பொறுப்பேதும் இல்லை என்பதால், சிறிலங்காவின் தற்போதைய சூழ்நிலை, ஐ.நா.சாசனம் அத்தியாயம் 7 பிரிவு 39 இன் கீழ், ‘அமைதிக்கான அச்சுறுத்தல்’ தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையை உள்ளடக்கியதாக இருக்கிறது.

  

More from our blog

See all posts