இனநெருக்கடிக்கு புதியதோர் அணுகுமுறையை இந்தியா கையாள வேண்டுகின்றோம் !

இனநெருக்கடி விவகாரத்தில் புதியதோர் அணுகுமுறையை இந்தியா கையாள வேண்டுகின்றோம் : பிரதமர் வி.உருத்திரகுமாரன்

Rudraஇந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் பலமான, உறுதியான, தீர்க்கதரிசனமான நிலைப்பாட்டினை, தங்கள் தலைமையிலான அரசாங்கம் உருவாக்கும் என பெரிதும் நம்புகின்றோம் என்று, இந்தியாவில் புதிதாக ஆட்சிபீடமேறியுள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்தில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் கோரியுள்ளார்..

இலங்கைத்தீவில் நிலவும் தமிழினத்தின் தேசியப் பிரச்சனை தொடர்பாக, தாங்கள் புதியதோர் அணுகுமுறையை மேற்கொள்ளல் வேண்டும் என்ற வேண்டுகோளைத் தங்களின் ஆலோசனைக்குச் சமர்ப்பிக்க விரும்புகின்றோம் என அக்கடிதத்தில் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், ஈழத்தமிழனத்துக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கான பரிகாரநீதி கிடைப்பதற்கு, சகல வழிகளிலும் தங்களாலான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

கடந்தகால நிகழ்வுகளின் பின்னணியிலும் வரலாறு எமக்கு உணர்த்தியுள்ள படிப்பினையின் அடிப்படையிலும், எமது பாரம்பரிய தாயகத்தில் எமது இனத்தின் தனித்துவத்தைப் பேணுவதற்கும், எமது இனம் அங்கு நிலைத்து நிற்பதற்கும், சுதந்திரமும் இறைமையும் படைத்த தமிழீழ அரசே எமக்குள்ள ஒரேயொரு தீர்வு என நாம் உறுதியாக நம்புகின்றோம் எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன் , இத்தகைய ஒரு தீர்வே இந்திய நாட்டின் பூகோள அரசியல் நலன்களுக்கும் ஏற்றதாக அமையும் என நாம் நம்புகின்றோம் எனவும் இந்தியப் பிரதமருக்கு வி.உருத்தரகுமாரன் அனுப்பிய கடித்தில் தெரிவித்துள்ளார்.

More from our blog

See all posts