இலங்கைத்தீவு முழுவதும் பௌத்தர்களுக்கே : வெளிச்சம் போட்டுக்காட்டிய சிறிலங்காவில் மத சுதந்திரம் எனும் ஜெனீவா உப மாநாடு !

  • March 12, 2015
  • TGTE
சிறிலங்காவில் மத சுதந்திரம் எனும் கருப்பொருளில் ஐ.நா மனித உரிமைச்சபையில் இடம்பெற்றிருந்த உப மாநாடு இலங்கைத்தீவு முழுவதும் பௌத்தர்களுக்கே என்ற நிலைப்பாட்டை வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளதாக ஜெனீவாத் தொடரில் பங்கெடுத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமைச்சபையில் இன்று காலை இடம்பெற்றிருந்த இந்த உப மாநாட்டில், ஐ.நாவின் மத சுதந்திர விவகாரங்களுக்கான சிறப்பு பிரதிநிதி (special Rapportur) Mr Heiner Bielefeldt அவர்கள் பங்கெடுத்து கருத்துரை வழங்கியிருந்தார்.

இதேவேளை சிறிலங்கா முஸ்லிம் கொங்கிரசின் உப செயலரும் கல்முனை நகரபிதாவுமாகிய முகமெட் நிசாம் காரியப்பர் அவர்களும் பங்கெடுத்துள்ளார்.

இஸ்லாமிய மக்களது வழிபாட்டு சுதந்திரம் அவர்களது பண்பாட்டு உரிமைகள் ஆகியன சிங்கள பௌத்த இனவாதிகளின் எத்தகைய நெருக்கடிகளை எதிர்கொண்டது பற்றியதான விடயங்கள் முதன்மை இடத்தினை பிடித்திருந்தன.

தமிழர் தாயகப்பகுதியில் திட்டமிட்ட வகையில் இடம்பெற்றுவரும் பௌத்த மயமாக்கல் மற்றும் கத்தோலிக்க மக்களது மறுக்கப்பட்டு வரும் வழிபாட்டு உரிமைகள் குறித்து கூடிய கவனம் செலுத்தப்படவில்லை என்ற கருத்து பார்வையாளர்களாக பங்கெடுத்திருந்த தமிழர் அமைப்பு பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்டிருந்தது.

கடந்த காலத்தில் சிங்கள பௌத்த இனவாதிகளால் நடந்தேறிய வன்முறைகள் மகிந்த அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலின் ஓர் அங்கமாக அமைந்திருந்ததென்ற கருத்தினை மீளமீள வலியுறுத்தியதானது, புதிய அரசாங்கம் புதிய ஆட்சி என்ற ஒப்பனையில் அனைத்துலகத்தினை ஏமாற்றும் சிறிலங்காவின் போக்கிற்கு நற்சான்று வழங்குவதாக அமைந்திருந்ததென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி சுதன்ராஜ் விசனம் தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காவே இஸ்லாமியர்கள், கத்தோலிகர்கள் மற்றும் இந்துக்கள் ஆகியோரின் மத சுதந்திரம், வழிபாட்டு உரிமைகள் ஆகியனவற்றுக்கு எதிரான சிங்கள பௌத்த இனவாதிகளின் நிலைப்பாடு உள்ளது எனவும் சுதன்ராஜ் தெரிவித்துள்ளார்.

More from our blog

See all posts