TGTE - Homeland தாயகம்
குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்பட்டதன் ஆபத்துக்களை இலங்கை தெளிவாக காட்டுகின்றது என தெரிவித்துள்ள பன்னாட்டு சட்டவாளர் றிச்சாட் ஜே றோஜெர்ஸ், சிறிலங்காவை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டு சுயாதீனமாக இயங்கி வரும், சிறிலங்காவின் நிலைமாறுகால நீதிச்செயற்பாடுகளை கண்காணிக்கும் ( Sri Lanka – Monitoring and Accountability Panel (MAP) பன்னாட்டு நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளராகவும், போர் குற்றங்கள், மானிடத்துக்கு எதிரான குற்றங்களை விசாரணை செய்யும் கம்போடிய கலப்பு நீதிமன்றத்தின் சட்டவாளருமாகவும் றிச்சாட் ஜே றோஜெர்ஸ் இருக்கின்றார்.
சிறிலங்கா விவகாரம் தொடர்பில் அவர் தெரிவித்துள்ளதாவது,
‘சிறிலங்காவில் உள்ள நிலைமை குற்றங்கள் தண்டிக்கப்படாமல் விடப்படுவதன் ஆபத்துகளைத் தெளிவாகக் காட்டுகிறது. அதாவது பெருமளவிலான குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. தமிழர்களுக்கு எதிராகத் தொடரும் சித்திரவதையும் பாலியல் வன்செயலும் இப்போதும் திட்டமிட்ட அமைப்புசார் குற்றங்களாகவே இருப்பது, இது சிறிலங்கா அரசாங்கம் செயல்படுத்தும் வன்ம உத்தியின் பகுதி என்றே எண்ணச் செய்கிறது.’
‘மனித உரிமைப் பேரவை சிறிலங்காவின் நிலைமையைப் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தின் பார்வைக்கு அனுப்பும் படி, ஐநா பாதுகாப்பு சபை;பு எடுத்துரைக்க வேண்டும். இது சிறிலங்காவில் பாதிப்புற்ற மக்களுக்கும் பொறுப்புக்கூறல் கோரும் மனித உரிமைக் காவலர்களுக்கும் ஆதரவு தெரிவிப்பதாக அமையும்.’ எனத் தெரிவித்துள்ளார்.