வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் எங்கே ? பரிஸ் வீதிகளில் நீதிகேட்ட உயர்ந்த மனிதன் !

  • August 31, 2022
  • TGTE

தமிழர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டமையானது சிறிலங்கா அரசின் தமிழினவழிப்பு மூலோபாயத்தின் ஓர் பகுதியே என்ற வாசகத்தினை தாங்கியவாறு, வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வியுடன் பரிஸ் வீதிகளில் நீதிகேட்ட உயர்ந்த மனிதன் பலரையும் நிமிர்ந்து பார்க்க வைத்துள்ளான்.

வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக நாளான நேற்று (ஓகஸ்ற்-30 செவ்வாயன்று) இலங்கைத்தீவில் சிறிலங்கா அரசினால் வலிந்து காணாமலாக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கோரி, தலைநகர் பரிஸ் கவனயீர்ப்பு பேரணி ஒன்று இடம்பெற்றிருந்தது.

கடந்த 2 ஆயிரம் நாட்களுக்கு மேலாக காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என நீதிகோரி போராடும் தாய்மார்களது நேற்றைய போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வகையில் புலம்பெயர் தேசங்களில் கவனீர்ப்பு போராட்டங்களை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒருங்கிணைத்திருந்தது.

அதன்வரிசையில் C’est nous les Tamouls, பிரான்சில் தமிழீழ மக்கள் பேரவை, போராளிகள் கட்டமைப்பு, தமிழீழ அரசியல்துறை – பிரான்ஸ் உட்பட தமிழர் அமைப்புக்கள் கூட்டாக கவனயீர்ப்பு பேரணி நிகழ்வினை முன்னெடுத்திருந்தன.

தலைநகர் பரிசின் மொம்பர்னாஸ் பகுதியில் இருந்து மதியம் 3 மணிக்கு தொடங்கிய நீதிக்கான பேரணி நாடாளுமன்ற முன்றல் அன்வலிட் பகுதியினை சென்றடைந்திருந்தது.

எங்கே என் அக்கா, என் அப்பா, என் அண்ணா என பல்வேறு சொற்கொட்டுக்களை தாங்கிய பதாதைகளுடன் பயணித்த பேரணியில் பயணித்த பொய்க்கால் உயர்ந்த மனிதன், பல்லினமக்களின் கவனத்தினையும் ஈர்த்திருந்தான்.பாதிக்கப்பட்ட மக்களின் அரங்காக வலிந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளது ஒளிப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட திடலில் பேரணி நிறைவு பெற்றிருந்தது.

இறுதிப்போரின் நேரடிச்சாட்சியாக பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக யாழ்நிலா ரஞ்சித்குமார், எழில்ஓவியா ரஞ்சித்குமார், அம்மு ரஞ்சித்குமார் சகோதரிகள் திடல்நிகழ்வினை தொகுத்து வழங்கியிருந்தனர். திரு.சுதாகரன், திரு.கிருபா, திரு.பொன் நாயகன் ஆகியோர் பாதிப்புக்குள்ளனா தமது சாட்சியங்களை முன்வைத்திருந்தனர்.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழீழ மக்கள் பேரவை சார்பில் திரு.மேத்தா, அரசியல்துறை பிரான்ஸ் திரு.சுக்ளா, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதமர் பணிமனைப் பொறுப்பாளர் திரு. மனோகரன் கருத்துரைகளை முன்வைத்திருந்தனர்.

பிரான்சில் தேசிய செயற்பாட்டில் நீண்டகாலம் பணியாற்றி பின்னர் ஊருக்கு சென்று சிறிலங்கா அரசினால் காணாமலாக்கப்பட்ட திரு.திலகர் அவர்களது நினைவுகளை மூத்த செயற்பாட்டாளர்கள் திருமதி. சுபாசினி குருபரன் அவர்கள் பிரென்சு மொழியில் வெளிப்படுத்தியிருந்தார்.

இந்நிகழ்வின் களஒருங்கிணைப்பினை முன்னெடுத்திருந்த  C’est nous les Tamouls சார்பில் திரு.குணா ஆறுமுகராசா அவர்களது நன்றியுரையுடன் நிகழ்வு இனிதே உறுதியேற்ப்புடன் நிறைவுபெற்றது.

More from our blog

See all posts