TGTE - Homeland தாயகம்
தம் இளமைக்காலத்தை எமக்காக உகந்தளித்த வீரமறவர்களின் நாள்… மாவீரர் நாள்!
மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை
முடிசூடும் தமிழ்மீது உறுதி!
வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன்
வரலாற்றின் மீதினிலும் உறுதி!
விழி மூடி இங்கு துயில்கின்ற வேங்கை
வீரர்கள் மீதினிலும் உறுதி!
இழிவாக வாழோம் தமிழீழப் போரில்
இனிமேலும் ஓயோம் உறுதி!
பிரித்தானியாவில்
எமது சுகந்திரம் வேண்டி இந்த உலகத்தை துறந்து இனிமையான உணர்வுகளை துறந்து மண்ணுக்காக எம் மக்களுக்காக எம் மக்களின் வாழ்விற்காக தங்கள் உயிர்களையும் ஈர்ந்த மாவீரர்களுக்காக நவம்பர் 27 ஆம் திகதி தமிழ் தேசிய நினைவேந்தல் தினத்தையொட்டி உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் தாயக மீட்புக்கான விடுதலைப் போராட்டத்தில் தங்கள் உயிர்களை தியாகம் செய்த விடுதலைப் போராளிகளை நினைவு கூருகின்றனர்.
அந்த வகையில் பிரித்தானியாவில் ஒக்ஷ்பேட் நகரிலே உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதல் நிகழ்வாக பிரித்தானிய கொடியினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொருமியமும் வணிக முயற்சிகளின் பிரதி அமைச்சர் வடிவேலு சுரேந்திரன் அவர்கள் ஏற்றி வைக்க அதனை தொடந்து தமிழீழ தேசிய கீதம் இசைக்கப்பட தமிழீழ தேசியக் கொடியினை தமிழீழ நிதி துறையின் பொறுப்பாளர் பாலதாஸ் அவர்களின் துணைவியார் போராளி மலரினி ஏற்றி வைத்தார்
அதனை தொடர்ந்து ஈகைச்சுடரினை தமிழீழ விடுதலைப் புலிகளின் ஜெயந்தன் படையனியின் சிறப்பு தளபதி ஜெயார்த்தன் அவர்கள் ஏற்றி வைத்தார் அதனை தொடர்ந்து துயிலுமில்ல பாடல் இசைக்கப்பட ஏனையோரும் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
இதனை தொடர்ந்து இதற்கென ஒழுங்கமைக்கப்பட்ட மண்டபத்தில் நிகழ்வுகள் நடைபெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதிப்பிற்குரிய பிரதமர் விஸ்வநாதன் உருத்திரகுமார் அவர்களின் மாவீரர் நாள் தொடர்பான அறிக்கையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர்கள், முதியோர் விவகார அமைச்சர் மதிப்பிற்குரிய பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் வாசித்தார். அதனை தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் பொது செயலாளர் தடா சந்திரசேகரன் அவர்கள் மற்றும் மனித உரிமை அமைப்பின் வழக்கறிஞ்ஞர் எழில் சந்திரசேகர் (இந்தியா) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.
இதனை தொடர்ந்து எழுச்சி பாடல்கள், நடனம், பேச்சு, கவிதை, என ஏராளமான நிகழ்வுகள் இடம்பெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு உணர்வெழுச்சியுடன் அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வினை புரட்சி அவர்கள் தொகுத்து வழங்கினார்.
ஒரு இனமானது தனது உரிமைகளுக்காகவும் சுதந்திர வாழ்வுக்காகவும் தங்களது உறவுகளை நினைவு கூர்வது சர்வதேசரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
எம்மின விடுதலைக்காக தம் இன்னுயிரை அர்ப்பணித்த வீரர்களுக்கும் மக்களுக்கும் மரியாதை செலுத்தும் இவ் வேளையில் தொடர்ந்தும் எம்மினத்தின் விடுதலை நோக்கிய பயணத்தில் சோர்வடையாது பயணிப்போம் என்று உறுதியெடுப்போம்.
ஊடகப்பிரிவு,
நா.க.த.அ
பிரித்தானியா
அமெரிக்காவில்
உலகப் பரப்பெங்கும் முன்னெடுக்கப்பட்டிருந்த தமிழீழத் தேசிய மாவீரர் நாள்வரிசையில் அமெரிக்கத் தலைநகர் நியு யோக்கிலும் மாவீரர்கள் உணர்வெழுச்சியுடன் நினைவுகூரப்பட்டுள்ளனர்.
மாவீரர்களை நினைவேந்தி கலைநிகழ்வுகள், உரைகள், கவிதைகள் என்பன நிகழ்த்தப்பட்டிருந்தன.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சிறப்புரை ஆற்றியிருந்தார்.
அவுஸ்ரேலியாவில்
இதேவேளை அவுஸ்றேலியாவின் பல்வேறு நகரங்களிலும் மாவீரர் நிகழ்வுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருந்தது என நா.தமிழீழ அரசாங்கத்தின் செயலகம் செய்திக்குறிப்பொன்றில் தெரிவித்துள்ளது.
மெல்பேணலில் இடம்பெற்றிருந்த தேசிய மாவீரர் நாளில் நினைவுரையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பெண்கள், சிறுவர்கள், முதியோர் விவகார துணை அமைச்சர் டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் நிகழ்த்தியுள்ளார்.
பேர்த் நகரில் இடம்பெற்றிருந்த தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் மாணிக்கவாசகர் கலந்து கொண்டு அவுஸ்திரேலியாக் கொடியினை ஏற்றியிருந்தார்.
பீரிஸ்பன் மாநிலத்தில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செனற்றர் பிரையன் செனிவரட்னா அவர்கள் சிறப்புரை வழங்கியுள்ளார்.
நாதம் ஊடகம் சேவை