2013-03-06 தமிழீழத் தாயக பெண்களுக்காய் !

  • September 16, 2013
  • WCE

அனைத்துலக பெண்கள் நாள்! தமிழீழத் தாயக பெண்களுக்காய் குரல் கொடுப்போம் வாரீர்! நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

மார்ச்-8 அனைத்துலக பெண்கள் நாளினை மையப்படுத்தி பிரித்தானியாவின் புகழ்பெற்ற பெண்கள் Million Women Rise பேரணியில் தமிழீழத் தாயக பெண்களுக்காக உரத்துக் குரல் கொடுக்க அணிதிரளுமாறு பிரத்தானிய வாழ் தமிழ் உறவுகளுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

போருக்கு பிந்திய இலங்கைத்தீவில் தமிழீழத் தாயகத்தினை ஆக்கிரமித்துள்ள சிங்கள படைகளினால் பல்வேறு நெருக்கடிகளையும் – சவால்களையும் எதிர்கொண்டு வருகின்ற தமிழ்பேசும் பெண்களின் சொல்லொணத் துயரங்களையும் அவர்கள் சந்திக்கின்ற சவால்களையும் வெளிப்படுத்த பெண்கள் பேரணியில் பிரித்தானிய வாழ் தமிழர்களை அணிதிரளுமாறு நா.தமிழீழ அரசாங்கத்தின் சிறுவர்-பெண்கள்-முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது.

எதிர்வரும் 09-03-2013 சனிக்கிழமை மதியம் 12:00 மணிக்கு Oxford Street (Outside Selfridges) எனும் இடத்தில் அணிதிரண்டு பின்னர் பேரணியாக இடம்பெறும் இந்நிகழ்வில் பல்லினப் பெண்கள் – அமைப்புக்கள் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.

போரின் போதும் போருக்குப் பின்னரும், தகவல்களைப் பெறுவதற்கான, ஒரு சட்டவிரோத ஆயுதமாக, பாலியல் வல்லுறவை சிறிலங்கா ஆயுதப்படையினரும் காவல்துறையினரும், பயன்படுத்தியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையானது இலங்கைத்தீவில் தமிழ்பெண்கள் நிலைகுறித்தான சமீபத்திய ஆவணமாக நா.தமிழீழ அரசாங்கத்தின் சிறுவர்-பெண்கள்-முதியோர் விவகாரங்களுக்கான அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

தமிழ்பெண்கள் மீதான சிங்கள பௌத்த பேரினவாத அரசினது அடக்குமுறையும் பாலியல் அத்துமீறல்களும் நன்கு திட்டமிடப்பட்ட இனவழிப்பின் ஓர் வடிவமாகவே இருக்கின்றதெனவும் அமைச்சர் பாலாம்பிகை முருகதாஸ் அவர்கள் தெரிவித்துள்ளார்.

http://www.tamilwin.com/show-RUmryDTbNYkv0.html

More from our blog

See all posts