சிங்களத்தின் திட்டமிட்ட இனஅழிப்புக்கு தங்கள் உயிர்களை காவு கொடுத்த தாயக உறவுகளை நினைந்து, பெருவாரியானவர்கள் குடும்பம் குடும்பமாய் வருகை தந்து உறவுகளை நினைவேந்தியுள்ளனர்.
தமிழர் தாயகத்தின் மீதான சிங்களத்தின் ஆக்கிரமிப்பு போரில் உயிர்நீத்த தாயக உறவுகளின் ஒளிப்படங்கள், முள்ளிவாய்க்கால் நினைவகத்தில் பொதுமக்களின் வணக்கத்துக்காக வரிசையாக வைக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொருவரும் தங்களின் வசதிக்கு ஏற்றவகையில் வருகை தந்து, உறவுகளுக்கு நினைவு வணக்கம் செலுத்தும் பொருட்டு காலை 11 மணி முதல் நினைவரங்கம் திறக்கப்பட்டிருந்ததோடு, மதியம் 2 மணி முதல் அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
சர்வமத நினைவேந்தல், நினைவேந்தல் உரைகள், நினைவேந்தல் நடனம் என இடம்பெற்றிருந்த நிகழ்வரங்கில், இலங்கைத்தீவில் தமிழினத்தின் மீது இனஅழிப்பு மற்றும் போர்குற்றத்தில் ஈடுபட்ட சிறிலங்கா அரச தலைவர்கள் , இராணுவ தளதிகள் ஆகியோரது நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முதற்பெயர்ப் பட்டியல் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டிருந்தது.
மனிதவுரிமைச் சட்ட நிபுணர் திரு அலி பெய்டூன் அவர்கள் குறித்த பட்டியல் தொடர்பிலான விளக்கவுரையினை வழங்கியிருந்தார்.
அமைச்சர் நிமல் விநாயகமூர்த்தி அவர்கள் குறித்த பட்டியல் அடங்கிய முதற்பிரதியினை வெளியிட பிரபல தொழில் அதிபர் திரு ரஜீவிகரன் முத்துராமன் அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது தேசிய துக்க நாள் உரை ஒளிபரப்பட்டது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துடன் கூட்டிணைந்து கனடிய தமிழர் பேரவை, கனடிய தமிழர் இணையம், தமிழ்ப் படைப்பாளிகள் கழகம் ஆகியன ஒன்றுபட்டு பொதுமக்கள் நிகழ்வாக அமைந்திருந்த இந்நிகழ்வின் ஊடக அறிக்கை :
மே மாதம் 18ம் திகதி ஞாயிற்றுக் கிழமை காலை 11 மணிக்கு ரொறொன்ரோ சென்ட் பீற்றர் அன் போல் மண்டபத்தில் நிகழ்ச்சிக்குழு ஒருங்கிணைப்பாளர் திரு வி. வின். மகாலிங்கம் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். அகவணக்கம் செலுத்தப்பட்ட பின் மூத்த அரசியல் வாதியும் இன உணர்வாளரும் செயற்ப்பாட்டாளருமான திரு ஈழவேந்தன் ஈகைச் சுடரை ஏற்றிவைக்க மலரஞ்சலி ஆரம்பமானது. ஆரம்பத்திலிருந்தே பல நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று மிக்க உணர்வோடும் ஆர்வத்தோடும் தமது புனித கடமையாக அஞ்சலி செய்து பிரார்த்தனையை நிறைவேற்றினார்கள்.
பிற்பகல் 2.30 மணிக்கு மேடை நிகழ்வுகள் ஆரம்பமாகின. திரு துஷ்யந்தன் அவர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். செல்விகள் சந்தனா தேவராஜா அபிராமி தேவராஜா ஆகியோர் கனடிய தேசிய கீதத்தையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் பாடினார்கள்.
கலாநிதி தவேந்திரராஜா, திருமதி சரோஜினி தங்கவேலு, மருத்துவக் கலாநிதி சாந்தகுமார், திரு நவரத்தினம் கனகேந்திரன் ஆகியோர் ஈகைச் சுடர் ஏற்றி வைக்க அகவணக்கத்தோடு நிகழ்வு ஆரம்பமானது.
தொடர்ந்து சமய வழிபாடுகள் இடம்பெற்றன. ரொறொன்ரோ சிவன் ஆலயக் குருக்கள் இந்துசமயப் பிரார்த்தனையை வழங்கினார். கிறீஸ்த்தவ மதப் பிரார்த்தனையை அருட்தந்தை மன்போட் அவர்களும் வணக்கத்திற்குரிய கிறிஸ்ரி குமார் அவர்களும் இஸ்லாமியப் பிரார்த்தனையை மௌலவி ராஜா இப்ராகீம் அவர்களும் வழங்கினார்கள்.
அடுத்து மரியாதைவணக்க நடனம் ஒன்றை கலைமணி திருமதி ஸ்ரீகலா பாரத் அவர்களின் மாணவி செல்வி தேஜஸ்வரி விஜயகுமார் வழங்கினார்.
அதையடுத்து கனடியத் தேசிய அரசியற் பிரமுகர்கள் இலங்கையின் பிற்போக்கான ஜனநாயகமற்ற மோசமான அரசியற் செயற்பாடுகளையும் நல்லிணக்கத்திற்கே வாய்ப்பில்லாமல் தொடருகின்ற அடக்குமுறை ஆட்சியையும் காரசாரமாக் கண்டித்து உரை ஆற்றினார்கள். ஸ்ரீலங்காவில் கண்ணியமான ஒரு ஆட்சியை ஏற்படுத்த கனடாவின் காட்டமான செயற்பாடுகள் தொடரும் என்றும் வலியுறுத்தினார்கள்.
மார்க்கம்/யுனியன்வில் பாராளுமன்ற உறுப்பினர் திரு யோன் மக்கலம் கனடிய லிபரல் கட்சித்தலைவர் மாண்புமிகு ஜஸ்டின் ரூடோ அவர்களின் செய்தியை வழங்கி உரையாற்றினார். ஒன்ராறியோ பழமைவாதக் (PC) கட்சி சார்பாக அதன் தலைவர் ரிம் குடாக் அவர்களின் செய்தியை வழங்கி அக்கட்சியின் வேட்பாளர் திரு கென்
கிருபா அவர்கள் உரையாற்றியதோடு அக்கட்சி சார்பாக தானும் திரு சண் தயாபரனும் போட்டியிடுவதையும் நினைவு கூர்ந்தார். ஒன்ராறியோ பாராளுமன்ற அமைச்சர் திரு பிரட் டுக்குயிட் அவர்கள் ஒன்ராரியோ முதலமைச்சர் கத்லீன் வின்னின் செய்தியை வழங்கி உரையாற்றினார்.
ஒன்ராறியோ NDP கட்சியின் முதல்வர் திருமதி அன்றியா ஹோவாத் அவர்களின் செய்தியை வழங்கி கட்சித் தலைவர் திரு நீதன் சண் அவர்கள் உரையாற்றினார். NDP கட்சியின் சார்பில் தெரிவான கனடாவின் முதலாவது தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர் செல்வி ராதிகா சிற்சபைஈசன் தனது சிறிலங்காப் பயணத்தை நினைவுகூர்ந்து உருக்கமான உரை ஒன்றை வழங்கினார்.
NDP கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் கிரெக் ஸ்கொட் அவர்கள் கனடிய எதிர்க்கட்சித் தலைவர் மதிப்புக்குரிய தோமஸ் மல்கேயர் அவர்களது செய்தியை வழங்கி உரைநிகழ்த்தினார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் காலம்சென்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஜாக் லேற்ரன் அவர்களின் துணைவியுமான ஒலிவியா சௌ அவர்கள், பிரபல ஊடகவியலாளரும் அரசியற் பிரமுகருமான திரு ஜோன் ரோரி ஆகியோரும் அங்கு உரையாற்றினார்கள்.
தொடர்ந்து நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் திரு விஸ்வநாதன் உருத்திரகுமாரன் அவர்களின் சிறப்புரை காணொளி மூலம் இடம்பெற்றது.
மற்றும் வைத்தியக் கலாநிதி சாந்தகுமார், திரு வேலுப்பிள்ளை தங்கவேலு, திரு நாதன் வீரவாகு, திரு ஈழவேந்தன் ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன. செல்வி சுரபி யோகநாதனின் தாயகப் பாடலொன்றும் நடனதாரகை நிவேதா ராமலிங்கத்தின் தாய்மண் வாசனை தந்த அற்புதமான நடனமும் மக்களை தாயகத்திற்குக் கொண்டு சென்றன.