லண்டன் பேச்சுவார்த்தை குறித்த அறிக்கையை தமிழ் தரப்புகள் வெளியிடவேண்டும்!-பிரதமர் உருத்திரகுமாரன்!

  • June 14, 2015
  • TGTE

தமிழ் மக்களின் உடனடி தேவைகள் மற்றும் தமிழர் பிரச்சினை குறித்து உத்தியோகபூர்வமாக அல்லது உத்தியோகபூர்வமற்ற முறையில் பேச்சு நடத்துவது புதிய ஒன்றல்ல என்று நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைத்துள்ள அவர், கடந்த காலங்களில் நடத்தப்பட்ட பல சந்திப்புக்களில் பங்கேற்ற வகையில் இலங்கை அரசாங்கங்கள் அரங்கேற்றும் நாடகங்கள் தொடர்பில் நன்கு அறிந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஒரு பேச்சுவார்த்தை ஆரம்பிக்கும் போது விடயங்கள் மாத்திரமன்றி அது காலவரையறைக்குள் அமையவேண்டும். இந்தநிலையில் தமிழர் பிரச்சினை தொடர்பில் யார் பேசினாலும் அவர்கள் தமிழர் நலனில் அக்கறை கொண்டவர்களாக இருக்கவேண்டும். இந்தநிலையில் இந்தவாரம் இலங்கை அரசாங்கத்துக்கும் உலக தமிழர் பேரவைக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுக்கள் தொடர்பில் பல கேள்விகள் எழுந்துள்ளன.

சர்வதேச ஆதரவுடன் பேச்சுவார்த்தைக்கான காலவரையறை மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணை இலங்கை அரசாங்கத்தினால் சர்வதேச உதவியுடனான உள்ளக விசாரணையாக மாற்றப்படும் முயற்சி என்பன தொடர்;பில் இந்த கேள்விகள் எழுந்துள்ளன.

குறித்த பேச்சுவார்த்தையின் போது பங்கேற்பாளர்கள் யார் என்ற மறைக்கப்பட்ட நிலையில் அந்த சந்திப்பில் பேசப்பட்ட விடயங்களின்  உண்மை குறித்து சந்தேகம் எழுந்துள்ளது என்றும் ருத்திரகுமாரன் குறிப்பிட்டுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையை பொறுத்தவரை தமிழ் புலம்பெயர்வாளர்களின் பரப்புரைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாகவே கருதவேண்டியுள்ளது.

தமிழர்களின் உடனடி தேவைகள் குறித்து பேச வேண்டுமானால் தமிழர் பிரதிநிதிகள் இலங்கையிலேயே பேசமுடியும். நடைமுறை அரசாங்கம், குறுகிய ஆயுளையே கொண்டிருக்கிறது

எனவே இந்த அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுவார்த்தை தமிழர் நலனில் எந்தளவு அக்கறை செலுத்தும் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தையில் உத்தியோகபூர்வமாக அமையாமல் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் உலக தமிழர் பேரவையின் தனிப்பட்டவர்கள் பங்கேற்றமையானது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

எனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உலக தமிழர் பேரவையும் இந்த பேச்சுவார்த்தை தொடர்பில் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டையும், அதில் பேசப்பட்ட விடயங்களையும் வெளிக்கொணர கடமைப்பட்டுள்ளனர்.

இது உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தையாக இருக்குமானால், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் உலக தமிழர் பேரவையும் பேசப்பட்ட விடயங்கள் தொடர்பில் உத்தியோகபூர்வ அறிக்கையை வெளியிடவேண்டும்.

இதேவேளை சுயஆட்சிக்கான தொடர்பான சர்வஜன வாக்கெடுப்பு, போர்க்குற்ற விசாரணை, தமிழ் புலம்பெயர்வாளர்களின் உதவியுடன் இலங்கை தமிழர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவும் பொறிமுறை என்பவற்றை வலியுறுத்தி வருவதன் காரணமாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இந்த பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை என்றும் உருத்திரகுமாரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

More from our blog

See all posts