TGTE - Homeland தாயகம்
நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் சிறிலங்காவை மையப்படுத்தி பல பக்க நிகழ்வுகள் நாள்தோறும் இடம்பெற்று வருகின்றது.
ஈழத்தமிழ் மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரி நீதி கோரியும், முஸ்லிம் பிரமுகர்கள் வன்முறைகளை அம்பலப்படுத்தியும் பக்க நிகழ்வுகளை ஐ.நாவின் கேட்போர் கூட்டதில் முன்னெடுத்து வருகின்றனர்.
இதுமட்டுமல்ல அனைத்துலக மனித உரிமை அமைப்புக்களினாலும் சிறிலங்காவை மையப்படுத்தி பக்க நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
இப்பக்க நிகழ்வுகளில் சிறிலங்கா இராணுவத்தினரது பொதுமக்கள் மீதான காணிகள் மீதான ஆக்கிரமிப்புக்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை, தமிழர் தாயகத்தில் கட்டமைக்கப்பட்டு வரும் சிங்கள மயமாக்கல், இராணுமயமாக்கல், பௌத்த மயமாக்கல் நடவடிக்கைகள் என பல்வேறு விடயங்கள் அரசியல் தளத்திலும், சமூகத்தளத்திலும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இப்பக்க நிகழ்வுகளில் சிறிலங்காவின் அதிகாரி குறிப்புகளை எடுக்கின்ற நிலைமைகள்தான் காணப்படுகின்றதே அன்றி, முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் மௌனத்தையே பேணிவருவதாக ஜெனீவாச் செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த காலங்களில் சிறிலங்கா அரச தரப்பினால் முன்னெடுக்கப்பட்ட பக்க நிகழ்வுகள் போல், இம்முறை ஏதும் ஏற்பாடுகள் செய்யப்பட்டதற்கான நிகழ்ச்சி நிரல் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் வரும் வாரம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று ஜெனீவா செல்ல இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.