தமிழர் தேசத்தை பாதுகாக்க தமிழ்த் தேசிய பேரியக்கம் ஒன்றை கட்டியெழுப்ப நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் !

  • November 23, 2019
  • TGTE

சிறிலங்காவின் புதிய ஆட்சியாளர்களிடம் இருந்து கருணை எதனையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. சிறிலங்காவின் புதிய அரச தலைவரும்,  அமைந்துள்ள மகிந்த ஆட்சியும் தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்யும் வேலைகளை வேகப்படுத்துவார்கள். சிறிலங்கா என்பது ஒரே மக்களைக் கொண்ட நாடு என்ற கொள்கையின் கீழ் சிங்கள மேலாண்மைக்குள் தமிழ் முஸ்லீம் மக்களைச் சிறைப்பிடிக்க முனைவார்கள். தமிழ் தாயகத்தை சிங்களக் குடியேற்றங்களால் நிறைப்பார்கள். அனைத்துலக அரசுகளுடன் நலன் சாரந்த உறவுகளைப் பேணி அவர்களைத் திருப்திப்படுத்திக் கொண்டு தமது திட்டங்களை முன்னெடுப்பார்கள்.  இத்தகையதொரு சூழலில் தமிழர் தேசத்தை பாதுகாக்க தமிழ்த் தேசிய பேரியக்கம் ஒன்றை கட்டியெழுப்ப நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் ஒன்றினை விடுத்துள்ளது.

இது தொடர்பில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,   சிறிலங்கா அதிபர் தேர்தலில் கோத்தாபய இராஜபக்ச சிங்கள மக்களின் வாக்குகளால் பெருவெற்றியடைந்திருப்பது சிங்கள பௌத்த தேசியவாதம் சிங்களதேசத்தில் ஆழமாக வேருன்றியிருப்பதனை நன்கு வெளிப்படுத்துகிறது. சிங்கள மக்களது வாக்குகளால் மட்டும் என்னால் வெற்றிகொள்ளமுடியும், தமிழ் முஸ்லீம் மக்களது வாக்குகள் எனக்குத் தேவையுமில்லை எனத் திடமாகக் கூறி அதன் வாறே கோத்தாபய இராஜபக்ச வெற்றி பெற்றிருப்பதும்கூட சிறிலங்காவை  முன்னிருந்ததைவிடத் தீவிரமான இனவாதத்தின் ஒரு தோற்றமாகவே வெளிப்படுத்தியுள்ளது.

சிறிலங்கா அரசு சிங்கள பௌத்த இனவாதநிறுவனமாக இவ்வாறு இறுகிப்போயிருக்கும் நிலையில், புதிய அரச அதிபரின் செயற்பாடுகள் சிறிலங்கா அரசை மேலும் சிங்கள பௌத்தமயப்படுத்தும் வகையில்தான் அமையும். எல்லாளனைத் தோற்கடித்த பின்னர் துட்டகைமுனுவால் கட்டப்பட்டதாகக் கூறப்படும் ருவான்வெலிசாய விகாரை வளாகத்தில் பதவிப்பிரமாணம் செய்தமையின் ஊடாக கோத்தாபய தன்னைத் தமிழர்களை வெற்றி கொண்ட நவீன துட்டகைமுனுவாக சிங்கள மக்கள் மனதில் பதிய வைக்க முயல்கிறார் என்றுதான் நாம் பார்க்கிறோம்.

ஒரு இனவழிப்புக் குற்றவாளியை அந்த இனவழிப்புக்குத் துணைபோன மக்கள் கூட்டம் ஆதரித்து நி;ற்பதனால் மட்டும் அவர் புனிதராகி விட முடியாது. உலகத் தமிழ் மக்களின் ஆன்மபலத்துடன், உலகில் நீதிக்காகப் போராடும் தோழமைகளுடன் இணைந்து, தமிழின அழிப்புக் குற்றவாளி கோத்தபாய இராஜபக்சவினை அனைத்துலக குற்றவியல் நீதி மன்றத்திலும் (ICC), சிறிலங்கா நாட்டினை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் உலக நீதிமன்றிலும் (International Court of Justice)  நிறுத்தும் போராட்டத்தை நாம் வீச்சாக முன்னெடுப்போம்.

சர்வதேச குற்றிவியல் நீதிமன்றத்துக்கு முன்னால், அரசு அதிபருக்கான விலக்கு( head of state immunity) என்ற திரைக்கு பின்னால் கோத்தபயவும்,  சிறிலங்கா நாடு என்ற வகையில் உலக நீதிமன்றத்தின் முன்னால்  இறைமைக்கான விலக்கு (sovereign immunity)  என்ற திரைக்கு பின்னாலும் ஒளித்து கொள்ள முடியது சுட்டிக்காட்டுகின்றோம்.

எமது இந்தப் பிரகடனம் எமது தார்மீகக்கோபத்தில் இருந்து மட்டுமல்ல, ஒரு இனஅழிப்புக் குற்றவாளி அரச தலைவராக இருக்கும் நிலையினை உலக மனச்சாட்சிக்குச் சுட்டிக்காட்டும் நோக்கத்தினையும் தன்னகத்தே கொண்டது. இவ்வேளையில் நடைமுறை யதார்த்தத்துக்கு இசைவாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் சிலர் எண்ணலாம்.

இவ்விடத்தில் நாம் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். தமிழ் மக்கள் தமது தேசத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் தமிழ்த் தேசியப் பேரியக்கமொன்றைக் கட்டியெழுப்பி அர்ப்பணிப்பு மிக்க ஜனநாயகவழிப் போராட்டங்களுக்குத் தம்மைத் தயார் படுத்திக் கொள்ள வேண்டிய காலம் வந்து விட்டது. புதிய ஆட்சியாளர்களிடம் இருந்து கருணை எதனையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. சிறிலங்காவின் புதிய அரசதலைவரும், தொடர்ந்து அமைந்துள்ள மகிந்த ஆட்சியும் தமிழர் தாயகத்தைக் கபளீகரம் செய்யும் வேலைகளை வேகப்படுத்துவார்கள். சிறிலங்கா என்பது ஒரே மக்களைக் கொண்ட நாடு என்ற கொள்கையின் கீழ் சிங்கள மேலாண்மைக்குள் தமிழ் முஸ்லீம் மக்களைச் சிறைப்பிடிக்க முனைவார்கள். தமிழ் தாயகத்தை சிங்களக் குடியேற்றங்களால் நிறைப்பார்கள். அனைத்துலக அரசுகளுடன் நலன் சாரந்த உறவுகளைப் பேணி அவர்களைத் திருப்திப்படுத்திக் கொண்டு தமது திட்டங்களை முன்னெடுப்பார்கள்.

இத்தகையதொரு சூழலில் தமிழ் மக்களுக்கு இரு தெரிவுகள் மட்டுமே இருக்கும்.

ஒன்று, யதார்த்தம் என்று கூறி புதிய ஆட்சியாளர்களுடன் நல்லுறவைப் பேண முயன்று சிங்கள மேலாண்மைக்குள் அமிழ்ந்து போவது.

அடுத்தது, நமது சக்தி அனைத்தையும் திரட்டி, நம்மைத் தேசமாக ஒருங்கிணைத்து நமது இருப்புக்கும் உரிமைக்காகவும் போராடுவது.

முதலாவது தெரிவு மிகவும் அவமானகரமானது. இது இனஅழிப்புக்கு வழிகோலும். இதனை நாம் தெரிவு செய்ய முடியாது. தமிழ் மக்கள் இரண்டாவது தெரிவினை மேற்கொண்டேயாக வேண்டும். இதனைத்  தமிழ் மக்களின் தேசிய அரசியற் தலைவர்களாகத் தம்மை அடையாளப்படுத்துவோர் தாமே முன்னின்று எடுத்துச்செல்ல வேண்டும். அரபு வசந்தம், பிரான்சின் மஞ்சள் அங்கிப் போராட்டம், மற்றும் தற்போது நடைபெறுகின்ற கொங் கொங் மக்கள் போராட்டம், பொலிவியா மக்கள் போராட்டம், ஈரான் மக்கள் போராட்டம் ஆகியன மக்கள் போராட்டங்களின்;  வலிமையினை எடுத்தியம்புகின்றன.

எமது பார்வையில் தமிழ் மக்கள் போராடினால்தான் வாழ்வு என்ற கட்டத்தை அடைந்துள்ளார்கள் என்றே கருதுகிறோம். இது சவால் நிறைந்த காலகட்டமாகவே இருக்கும். இதனைத் தமிழ் மக்கள் எதிர்கொள்வது நெருப்பாற்றை நீந்திக் கடப்பது போன்றதாகவே அமையும். இருந்த போதும் இதுதான் யதார்த்தமாக அமையப் போகிறது. இந்த யதார்த்தத்தை எதிர்கொள்ளத் தாயகத் தமிழ் மக்கள், புலர்பெயர் தமிழ் மக்கள், தமிழ்நாடு மக்கள், உலகத் தமிழ் மக்கள் என அனைவரும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமாக இருக்கும்.

சிறிலங்காவின் தமிழின அழிப்பாளிகளை அனைத்துலக அரங்கில் நீதியின் முன் நிறுத்தும் தமிழ் மக்களின் போராட்டத்துக்கு கோத்தாபய இராஜபக்ச அரசதலைவராகத் தேர்வு செய்யப்பட்டமை தார்மீகத் தளத்தில் பலம் சேர்க்கும். நீதியின் பக்கம் நிற்கும் உலக மக்களின் ஆதரவை எமக்குப் பெற்றுத் தரும். தொடர்ச்சியான மக்கள் போராட்டத்தை நடத்தும் வகையில் தமிழ் தேசம் மாவீரர்கள் நினைவுடன் தன்னை உயிர்ப்பித்துக் கொள்ள வேண்டும். என பிரதமர் வி.உருத்திரகுமாரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

More from our blog

See all posts