பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களுடைய தேசிய துக்க நாள் உரை ஒளிபரப்பட்டிருந்தது.
இந்நிகழ்வு தொடர்பில் மெல்பேண் தமிழ் ஊடக தொடர்பகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு :
அவுஸ்திரேலியா மெல்பேணில் “தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2014” நினைவு நிகழ்வுகள் 18-05-2013 ஞாயிற்றுக்கிழமை பெரும் தொகையான மக்களின் பங்களிப்புடன் உணர்வுபூர்வமாக நடந்தேறின.மெல்பேண் ஸ்பிறிங்வேலில் அமைந்துள்ள ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் சரியாக மாலை 5.00 மணிக்கு பொதுச்சுடரேற்றலுடன் தொடங்கிய இந்நினைவு நிகழ்வு இரவு 7 மணியளவில் நிறைவடைந்தது. முதன்மைச் சுடரை அண்ணாவியார் திரு. இளைய பத்மநாதன் அவர்கள் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தி வைக்க, முள்ளிவாய்க்கால் பேரவலத்தை நேரிலிருந்து எதிர்கொண்ட சிறுவனுட்பட முன்று தலைமுறைகளைச் சேர்ந்த மூவர் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியக் கொடியை அகதிகள் விடயங்களில் போராடி வரும் Balarat ஐச் சேர்ந்த Kath Morton அவர்களும், தமிழீழத் தேசியக்கொடியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் திரு. மாணிக்கவாசகர் அவர்களும் ஏற்றினார்கள். அதனைத் தொடர்ந்து அகவணக்கம் இடம்பெற்றது. அதன்பின்னர் உயிர்நீத்த மக்களுக்கான மூன்று மதத் தலைவர்களின் மத வழிபாடு இடம்பெற்றது.
அடுத்த நிகழ்வாக முள்ளிவாய்க்கால் பேரழிவை நினைவுகொள்ளும் காணொலி அகலத்திரையில் திரையிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து விக்ரோரிய தமிழ் சங்கங்களின் கூட்டமைப்பிலிருந்து திரு. சிவகுமார் அவர்களால் இந்நிகழ்வு பற்றிய முன்னோட்டமும் இந்நிகழ்வின் தேவையும் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
விக்ரோறிய மாநிலத்தில் செயற்பட்டுவரும் அனைத்துத் தமிழ் அமைப்புக்களின் ஒருங்கிணைந்த முயற்சியாக இந்நிகழ்வு நடைபெறுவதையும் இனிவருங் காலங்களில் இம்முயற்சி தொடரப்படுமென்ற செய்தியையும் இவ்வுரை சுட்டிநின்றது. அடுத்து இளம் இசைக்கலைஞர் கோகுலன் அவர்களால் மனித அவலங்களின் தாக்கத்தை உணர்த்தும் ஆங்கிலப்பாடல் ஒன்று இசைக்கப்பட்டது.
தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் புகழ்பெற்ற பாடகரான Les Thomas அவர்களால் தமிழ்மக்களின் இன்னல்களை வெளிப்படுத்தும் பாடலொன்று பாலச்சந்திரன் பிரபாகன் என்ற சிறுவனின் படுகொலையை பாடுபொருளாககொண்டு பாடப்பட்டது.
தொடர்ந்து அவுஸ்திரேலியாவின் கிறீன் கட்சியைச் சேர்ந்த Colleen Hartland அவர்களின் உரை இடம்பெற்றது. இந்நாளில் தமிழ் மக்களின் வலியைத் தான் உணர்வதாகவும், தமிழ்மக்கள் எதிர்கொண்ட துன்பங்களுக்கான நியாயம் நிச்சயம் ஒருநாள் கிடைத்தே தீரவேண்டும்; அதுவரை விடாது தொடர்ந்து போராட வேண்டியது அனைவரினதும் கடமை என்ற சாராம்சத்தில் அவ்வுரை அமைந்திருந்தது.
அதனைத் தொடர்ந்து நாட்டிய நாடகமொன்று மேடையேற்றப்பட்டது. நடனக்கலைஞர்களான நிக்சன் மற்றும் சிறிராம் ஆகியோருடன் எல்லாளன் விளையாட்டுக்கழக கலைஞர்களும் இணைந்து வழங்கிய இந்நாட்டிய நாடகம் பார்வையாளர் அனைவரினதும் உணர்வுகளைத் தொட்டது.
இறுதியாக கொடியிறக்கலுடனும் “தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்” என அனைவரதும் உறுதியெடுப்புடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் மாலை 7 மணியளவில் நிறைவடைந்தன.
அவுஸ்றேலியாவின் மெல்பேண் பகுதியில் இடம்பெற்றிருந்த தமிழீழத் தேசிய துக்க நாள் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றுள்ளது.