ஈழத்தமிழர் விவகாரம் தொடர்பில் தங்கள் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருந்த விடயங்கள், உலகத்தமிழ் இனத்தின் மத்தியில் பெருமளவு உற்சாகத்தையும், தாங்கள் பெருவெற்றி ஈட்ட வேண்டும் என்ற விருப்பையும் ஏற்படுத்தியிருந்தது. எனவேதான் தேர்தலில் தாங்கள் அடைந்த பெருவெற்றி நமக்கெல்லாம் பெருமகிழ்வைத் தருகிறது எனத் தெரிவித்துள்ள பிரதமர் வி.உருத்திரகுமாரன், தேர்தல் முடிவுகள் தமிழ்நாட்டின் தீர்க்கமான குரலாகத் தங்களை மிகத் தெளிவாக இந்திய மத்திய அரசுக்கும் உலகுக்கும் அடையாளம் காட்டியிருக்கின்றனத் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைத் தீவில் தமிழின அழிப்பைத் தலைமை தாங்கி நடாத்திய, தற்போதும் நடாத்திக் கொண்டிருக்கும் சிங்கள இனவெறி அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, இந்தியப் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வுக்கு அழைக்கப்பட்டமை குறித்துத் தாங்கள் தெரிவித்த கண்டனக் கருத்து, உலகத் தமிழ் மக்களின் கவனத்தை மிகவும் ஈர்த்துள்ளது என்பதனையும் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா சிங்கள அரசின் இனஅழிப்புக்குத் தொடர்ந்து ஆளாகிவரும் தமிழ் மக்களுக்கு விடிவைத் தேடும் வகையில், தங்கள் தலைமையில் தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையில் வரலாற்றுப் பெருமை மிக்க தீர்மானங்களை நிறைவேற்றி, உலகத் தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்றிருக்கிறீர்கள் எனவும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.